பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
BBC Tamil May 30, 2025 02:48 AM
Getty Images நாகம்

பாம்புகளைப் பார்த்தாலே மனிதர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சூழல் இல்லை என்றாலும்கூட, பதற்ற உணர்வு என்பது மனிதர்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

இந்தச் சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், உயிர் பயமும் பதற்றமும் உச்சத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், அந்தப் பதற்றம்தான் முதல் எதிரி என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்வதாகவும் அவற்றில் சுமார் 58,000 பேர் உயிரிழப்பதாகவும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கைப்படி, விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில்தான் அதிக அளவிலான பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், ஒரு பாம்பு கடித்துவிட்டால் உயிரைக் காக்க உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

இதுகுறித்த தகவல்களை, பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் பிபிசி தமிழிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நச்சுப் பாம்புகள் யாவை?

இந்தியா முழுக்கவே பரவலாக அதிகமான பாம்புக்கடி மரணங்களுக்குக் காரணமாக இருப்பவை நான்கு பாம்புகள். அவை,

  • கண்ணாடி விரியன் – மனித வாழ்விடங்களில் எண்ணிக்கையில் இருப்பதாலும், இவை பல நேரங்களில் மலைப்பாம்பு எனத் தவறாகக் கருதப்பட்டு, அலட்சியமாகக் கையாளப்படுவதாலும் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன.
  • நாகம் – மிகவும் வீரியமிக்க, நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நஞ்சைக் கொண்டவை என்பதால், உடலில் அதன் விளைவுகளும் விரைவாகவே ஏற்படக்கூடும்.
  • சுருட்டை விரியன் – மிகச் சிறிய உடலமைப்பு உள்ளவை என்றாலும், வீரியமிக்க நஞ்சைக் கொண்டவை
  • கட்டு வரியன் – இவற்றின் நஞ்சு உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதித்து தசைமுடக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவாக மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படாத, ஆனால் ஆபத்தான நஞ்சுள்ள பிற பாம்புகள்

  • புல் விரியன் (Bamboo pit viper)
  • சோலை மண்டலி (Malabar pit viper)
  • குற்றாலக் குழிவிரியன் (Hump nosed pit viper)
  • ஒற்றைச் சக்கர நாகம் (Monocled cobra)
  • பட்டை கட்டு வரியன் (Banded Krait)
Getty Images கண்ணாடி விரியன் பாம்பு கடித்தவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

பொதுவாக, மழைக்காலங்களில் அதிகமான பாம்புக்கடி சம்பவங்கள் இந்தியாவில் நடக்கின்றன. அதற்குக் காரணம், அவைதம் வாழ்விடங்களை இழப்பதால், மழைக்காலங்களில் விவசாய நிலங்கள், தோட்டங்கள், வீடுகள் போன்ற இடங்களில், குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகுகள் அல்லது பொருட்களுக்கு இடையில் தஞ்சம் புகுவதே என்கிறார் முனைவர் மனோஜ்.

அவரது கூற்றுப்படி, ஏதேனும் ஒரு சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், முதலில் கடிபட்ட நபர் பதற்றப்படக்கூடாது. பதற்றத்துக்கு உள்ளாகும்போது, ரத்த ஓட்டம் உள்பட உடலின் செயல்பாடுகள் வேகமெடுக்கும். அதன் விளைவாக, பாம்பின் நஞ்சு வேகமாக கடிபட்ட இடத்தில் இருந்து மற்ற பாகங்களுக்குப் பயணிக்கும் அபாயம் உள்ளது.

அதேபோல, பலரும் பாம்பு கடித்த இடத்துக்கு மேலாக கயிறு, துணி போன்றவற்றால் இறுக்கமாகக் கட்டுகிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது என்கிறார் மனோஜ்.

Subagunam Kannan சுருட்டை விரியன்

அதுகுறித்து விளக்கிய அவர், "இப்படிச் செய்வதால், ரத்த ஓட்டம் முழுவதும் தடைபடுவதோடு, நஞ்சு அங்கேயே அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்ட இடத்திலுள்ள திசுக்கள் அழுகிவிடும். இது, கை அல்லது கால் என அந்தக் குறிப்பிட்ட பாகத்தையே நீக்கும் அபாயத்தை உருவாக்கலாம்.

ஒருவேளை, காட்டுக்குள்ளோ அல்லது உடனடியாக மருத்துவமனையை அணுக முடியாத பகுதியிலோ இருந்தால், உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு முதலுதவியாக இதைச் செய்யலாம். ஆனால், பாம்பு கடித்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக மருத்துவ உதவியைப் பெற்றுவிட முடியுமெனில் நிச்சயமாக அப்படிச் செய்யக்கூடாது," என்றார்.

Getty Images கட்டு வரியன்

இதுபோக, நாய்க்கடிக்கு செய்வதைப் போல் சோப்பு போட்டு முழுவதுமாகக் கழுவக்கூடாது. நாய் கடித்தால் அப்படிக் கழுவுவது காயத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகளை அகற்ற உதவும். ஆனால், பாம்பைப் பொறுத்தவரை இதுவே ஆபத்தை பெரிதுபடுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் மனோஜ்.

அதோடு, பாம்புக்கடிக்கு ஆளான நபர் நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. முனைவர் மனோஜின் கூற்றுப்படி, உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் எப்படி அந்த இடத்தைச் சிறிதும் அசைக்காமல் வைத்துக்கொண்டு சிகிச்சைக்குச் செல்வோமோ அதேபோலத்தான் பாம்புக்கடியின் போதும் செயல்பட வேண்டும்.

அப்படியின்றி, இயல்பாக உடலை இயக்கிக்கொண்டே இருந்தால், அது நஞ்சு ரத்தத்தில் விரைவாகப் பரவ வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

கண்டிப்பாக, சிகிச்சை என்ற பெயரில் கடிபட்ட இடத்தைக் கீறிவிட்டு, வாய் வைத்து நஞ்சை உறிஞ்சி வெளியே எடுக்க முயலக்கூடாது. இப்படிச் செய்வதால் நஞ்சு நிச்சயமாக வெளியேறாது.

Getty Images ஒற்றைச் சக்கர நாகம்

"அதற்கு மாறாக, ஒருவேளை பாம்பு மேற்புற சதையில் மட்டுமே கடித்திருந்தால், இப்படிக் கீறிவிடுவது, நஞ்சு மேலும் ஆழமாக உள்ளே பரவக் காரணமாகிவிடும். அதோடு, காயத்தின் மீது வாய் வைத்து உறிஞ்சும் நபருக்கு, வாய்ப்புண், சொத்தைப் பல் ஆகியவை இருந்தால், கடிபட்ட நபரைவிட, இப்படி சிகிச்சையளிக்க முயலும் நபர்கள் விரைவில் நஞ்சின் வீரியத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்

மேலும், கடிபட்ட இடத்தைப் பிதுக்கி நஞ்சை வெளியே எடுக்க முயல்வது, அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி நஞ்சு உடலுக்குள் வேகமாகப் பரவ வழிவகுக்கும்," என்று எச்சரிக்கிறார் மனோஜ்.

பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன? Getty Images பட்டை கட்டு வரியன்

ஒருவேளை ஒருவர் பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், முதலில் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் மனோஜ். அடிப்படையில் நிச்சயமாக உயிர் பயம் ஏற்படும்.

இருப்பினும், "அதன் விளைவாக ஏற்படும் பதற்றம், நஞ்சை பிற பகுதிகளுக்கு வேகமாகப் பரவச் செய்துவிடும் என்பதால் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியமாகிறது."

பாம்புக்கடி குறித்து ஆய்வு செய்து வரும் மனோஜின் கூற்றுப்படி, இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி சம்பவங்களில் சுமார் 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. அவற்றால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை.

"வெறும் 5% பாம்புக்கடிகள் மட்டுமே நச்சுப் பாம்புகளால் ஏற்படுகின்றன என்பதால், முதலில் பயப்படுவதையும் பதற்றப்படுவதையும் தவிர்ப்பது அவசியம்."

Subagunam Kannan புல்விரியன்

அதேவேளையில், நஞ்சுள்ளதா, நஞ்சற்றதா என்பதைப் பொருட்படுத்தாமல் பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அத்தியாவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

பாம்பு கடித்த 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்துக்குள் மருத்துவ உதவியைப் பெற்றால் உயிருக்கு ஆபத்து ஏதுமின்றிக் காப்பாற்ற முடியும் என்கிறார் அவர்.

அதேவேளையில், நாகம் போன்ற வீரியமிக்க நஞ்சைக் கொண்ட பாம்புகளைக் கடுமையாகச் சீண்டிவிட்டு, ஆத்திரமூட்டியதால் ஒருவர் கடிபட்டால், காப்பாற்றுவது மிக மிக அரிது என்றும் எச்சரிக்கிறார்.

Dr.M.P.Koteesvar பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்

ஏனெனில், "அத்தகைய சூழலில் பாம்பு மிக அதிகளவிலான நஞ்சைச் செலுத்திவிடும். ஆகவே, அதன் விளைவுகளும் உடனடியாக நிகழ்ந்து, விரைவாக உயிரைப் பறித்துவிடும். அந்தச் சந்தர்ப்பங்களில் 30 நிமிடங்களுக்குள் சென்றால்கூட காப்பாற்றுவது மிகவும் சிரமம்."

அடுத்ததாக, கடித்த இடத்திலோ அல்லது அதைச் சுற்றியோ ஒருவர் அணிந்திருக்கக்கூடிய வளையல், கொழுசு, மெட்டி, மோதிரம் போன்ற ஆபரணங்கள் அல்லது கயிறுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றை அகற்றிவிட வேண்டும்.

"பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி நஞ்சின் விளைவாக வீக்கங்கள் ஏற்பட்டால், அவையே மேற்கூறிய கயிறு கட்டும் செயலின் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உடனடியாக அவற்றை நீக்கிவிட வேண்டும்."

கூடவே, பாம்புக்கடிக்கு உள்ளான நபரை, கடிபட்டதில் இருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வரை அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஒருவர் குறித்து வைத்து, மருத்துவருக்குத் தெரிவிப்பது சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளின் நிலை என்ன? Getty Images சோலை மண்டலி

பாம்புக்கடிக்கான நஞ்சுமுறி மருந்தைப் பொறுத்தவரை, இரண்டு வகைகள் உள்ளன. அவை, மோனோவேலன்ட் மற்றும் பாலிவேலன்ட்.

மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்து என்பது ஒரு குறிப்பிட்ட பாம்பின் நஞ்சை முறிக்கப் பயன்படும் மருந்து.

பாலிவேலன்ட் மருந்து என்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகளின் நஞ்சுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய நஞ்சுமுறி மருந்து.

ஒவ்வொரு பாம்புக்கும் தனித்தனியாக மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்தைத் தயாரிப்பது மிகவும் சவாலான, சிக்கல்மிக்க பணி என்பதால், இந்தியாவில் பாலிவேலன்ட் நஞ்சுமுறி மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

அதாவது, "நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு வரியன் என எந்தப் பாம்பு கடித்தாலும் அதற்கு ஒரே நஞ்சுமுறி மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும்" என்கிறார் மனோஜ்.

இருப்பினும், ஒருவர் பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு உடனடியாக இந்த சிகிச்சை வழங்கப்படாது.

Getty Images குற்றாலக் குழிவிரியன்

மனோஜின் கூற்றுப்படி, வெள்ளை ரத்த அணுக்கள் பரிசோதனை (WBC Test) மேற்கொள்ளப்படும். "இந்தப் பரிசோதனையை பல முறை செய்து பார்த்து, அனுமதிக்கப்பட்ட நபரைக் கடித்தது நச்சுப் பாம்பா அல்லது நஞ்சற்ற பாம்பா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள். மேலும், அவரது உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் கண்காணிப்பார்கள். இதன் மூலம் நச்சுப் பாம்புதான் கடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே நஞ்சுமுறி மருந்து வழங்கப்படும்."

ஒருவேளை, நஞ்சில்லாத பாம்பு கடித்திருந்து, அதை அறியாமல் நஞ்சுமுறி மருந்து கொடுக்கப்பட்டால், அதன் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதாலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் மனோஜ் விவரித்தார்.

மேலும், நஞ்சுள்ளதோ, நஞ்சற்றதோ, ஒரு பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் என்றும் உரிய பரிசோதனைகளின் மூலம் ஆபத்தில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் முனைவர் மனோஜ் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.