'வடசென்னையை வாழத் தகுதியற்ற இடமாக்கிவிடும்' - கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை எதிர்க்கும் மக்கள்
BBC Tamil May 31, 2025 12:48 AM
Getty Images குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், பெருங்குடியில் கைவிடப்பட்டு, கொடுங்கையூரில் 'ஒருங்கிணைந்த திடக்கழிவு செயலாக்க' திட்டமாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த எரி உலை திட்டத்தைச் செயல்படுத்த உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சூழலியல் ரீதியாகவும் மிகுந்த ஆபத்துக்குரியது என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், இந்தத் திட்டத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார், சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எம்.மகேஷ்குமார்.

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு பகுதிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது. அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இந்த எரி உலை திட்டத்தில் என்ன நடக்கும்?

BBC கொடுங்கையூரில் மலை போன்று குவிந்துள்ள குப்பைகள்

நீங்கள் சென்னைவாசியாக இருந்தால் நிச்சயம் வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்க வரும் பேட்டரி வாகனங்களில் ஒலிக்கும் விழிப்புணர்வுப் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், அதற்குப் பிறகு அந்தக் குப்பைகள் என்ன ஆகின்றன என்பது பற்றி பலரும் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை.

சென்னையைப் பொறுத்தவரை, வடக்கில் எண்ணூர் தொடங்கி, அம்பத்தூர், போரூர் மற்றும் தெற்கே சோழிங்கநல்லூர் வரை சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குள் வருகின்றன.

இந்தப் பெருநகரப் பகுதியில், நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 6,150 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. 2040ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையின் அளவு 11,793 மெட்ரிக் டன்னாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை என்பது தற்போது வரை சவால் நிறைந்த விஷயமாகவே இருந்து வருகிறது. அதுவும் சென்னை போன்ற மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த மாநகரங்களில் இது பல கூடுதல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

குப்பைக் கிடங்குகளும் மக்களின் இன்னல்களும்

பன்னெடுங்காலமாக இந்தக் குப்பைகள் ஒரு பரந்து விரிந்த நிலப்பரப்பில் கொட்டப்பட்டு வருகின்றன. சென்னையை எடுத்துக் கொண்டால் தெற்குப் பகுதியில் பெருங்குடியிலும் வடக்குப் பகுதியில் கொடுங்கையூரிலும் குப்பைக் கிடங்குகள் அமைந்துள்ளன.

இந்தக் குப்பைகள் பல ஆண்டுகளாக சிறுகச் சிறுகச் சேர்ந்து மலை போல் உருவாகிவிட்டன. இதனால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் மாசுபாடுகளை எதிர்கொள்வதாக அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் நீண்ட காலமாகத் தெரிவித்து வருகின்றனர்.

கொடுங்கையூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குப்பைக் கிடங்கு இருந்து வருவதாகத் தெரிவிக்கிறார், வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டிகே சண்முகம்.

சுமார் 300 ஏக்கருக்கும் மேல் பரவியுள்ள கொடுங்கையூர் குப்பைப் கிடங்கு வளாகத்தில், 252 ஏக்கரில் 6.51 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

"இந்தக் குப்பைக் கிடங்கால் இங்கு நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. ஏற்கெனவே சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பல சுகாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்" என்றார்.

பயோமைனிங் திட்டம் BBC

குப்பைக் கிடங்குகளை அகற்றுவதற்குத் தீர்வாக பயோமைனிங் திட்டம் முன்வைக்கப்படுகிறது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 2021ஆம் ஆண்டு பயோமைனிங் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும் ரூ.640 கோடி பயோமைனிங் திட்டம் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

இந்தத் திட்டம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2027இல் இந்தத் திட்டம் முடிக்கப்பட்டு குப்பைக் கிடங்காக உள்ள 252 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்திருந்தது.

நெடுங்காலமாக கொடுங்கையூர் புறக்கணிக்கப்படுகிறது என்கிற உணர்வு மக்களிடம் இருந்து வந்ததாகத் தெரிவிக்கிறார் சண்முகம்.

"பெருங்குடியில் பயோமைனிங் தொடங்கிய நிலையில் கொடுங்கையூரில் தொடங்காமல் இருந்தது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இறுதியாக பயோமைனிங் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

அதோடு, மீட்கப்படும் இடத்தில் பூங்கா உள்பட மக்களுக்குத் தேவையான பல வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆசையில் மக்கள் இருந்தனர். ஆனால் இந்தப் புதிய அறிவிப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்றால் என்ன? Palluyir trust ஆலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி

சென்னையில் சேகரமாகும் குப்பைகளின் அளவு அடுத்த 15 ஆண்டுகளில் இரு மடங்காகும் என கணிக்கப்பட்டிருந்தது. திடக் கழிவுகளில், மறு சுழற்சி செய்ய இயலாத குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை மற்றும் இயற்கை உயிரி எரிவாயு நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

அதன்படி, பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இரண்டு கட்டங்களாக இதைச் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அதன் பின்னர், பெருங்குடியில் செயல்படுத்தவிருந்த திட்டம் கைவிடப்பட்டு கொடுங்கையூரில் "ஒருங்கிணைந்த திடக்கழிவு செயலாக்க வசதியை" ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. சென்னையின் 15 மண்டலங்களிலும் சேகரமாகும் கழிவுகளில் சில இங்கு செயலாக்கம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, தற்போது கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள இடத்திற்கு அருகே இதைச் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மொத்தம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,268 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த திடக்கழிவு செயலாக்க வசதியில் என்ன இருக்கும்?

ஐம்பது ஏக்கரில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையில் நாளொன்றுக்கு 2,100 டன் குப்பைகள் எரிக்கப்படும். அதன் மூலம் 31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

மேலும், 9.74 ஏக்கர் நிலத்தில் இயற்கை உயிரி எரிவாயு நிலையம் அமையவுள்ளது. 15.49 ஏக்கர் நிலப்பரப்பில் உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

கொடுங்கையூரை பலியாக்குவதா? - உள்ளூர் மக்கள் கேள்வி

இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தமும் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஆனால் பொது மக்கள், குடியிருப்பு சங்கங்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், கவுன்சிலர்கள் உள்படப் பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெருங்குடியில் பயோமைனிங் மூலம் மீட்கப்படும் இடத்தில் சூழல் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதற்காக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பசுமைத் தீர்ப்பாயமும் பெருங்குடி குப்பைக் கிடங்கை மீட்டு அதன் முந்தைய நிலையிலேயே பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

BBC சிறிய அளவிலான எரியூட்டும் நிலையம்

தென் சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக்கூட இங்கு கொண்டு வருவது எங்களை பலியாக்கும் செயலாகவே உள்ளது என்கிறார் சண்முகம்.

"ஏற்கெனவே சென்னையின் பெரும்பாலான தொழிற்சாலைகள் வட சென்னையில்தான் உள்ளன. இங்குள்ள மாசுபாட்டைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கொடுங்கையூரை மீட்டால் வட சென்னையின் முகம் மாறும் என எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் இந்தப் புதிய அறிவிப்பு கொடுங்கையூரைச் சுற்றியுள்ள பகுதிகளின் மாசுபாடு மற்றும் சுகாதாரப் பிரச்னைகளை அதிகரிக்கவே செய்யும்" எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்தத் திட்டத்திற்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதால் என்ன பாதிப்பு? BBC சிறிய அளவிலான எரியூட்டும் நிலையம்

குப்பை மேலாண்மை என்கிற கேள்விக்கு இந்தத் திட்டம் பாதுகாப்பான தீர்வு அல்ல என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான நிபுணர் ஜியோ டாமின்.

"இந்தத் திட்டம் முதலில் மிகவும் செலவுமிக்கது. இந்தத் திட்டத்தால் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை நம்முடைய தேவையுடன் ஒப்பிட்டால் அது மிகவும் சொற்பமே.

இதிலிருந்து வருகிற நச்சுக் கழிவுகளை அழிக்க முடியாது. இந்தத் திட்டம் புதிது அல்ல. ஏற்கெனவே சிறிய அளவில் சில எரியூட்டும் நிலையங்கள் உள்ளன. தற்போது பெரிய அளவில் செயல்படுத்தப்படுகின்றது," என்று கூறினார்.

இதிலிருந்து வருகிற சாம்பல் கழிவை எப்படி பாதுகாப்பாகக் கையாள முடியும் என்கிற கேள்வி உள்ளதாகவும் கூறுகிறார் ஜியோ டாமின்.

"சென்னை போன்ற இயற்கைப் பேரிடர்களை அதிகம் சந்திக்கும் ஊரில் இது மிகவும் சவாலானது. சாம்பல் கசிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

ஆனால், இயற்கையாக மக்குவதைவிட இவ்வாறு எரித்து சாம்பலாக்கினால் அதன் எச்சங்கள் எளிதாக மண்ணில் கலந்துவிடும். இதில் கரிமம் போன்ற நச்சு வாயுக்களின் உமிழ்வுகளும் அதிகமாக இருக்கும்" என்றார் அவர்.

ஹைதராபாத் பயணம்

இந்தத் திட்டத்திற்கு கவுன்சிலர்கள் மட்டத்திலேயே எதிர்ப்பு நிலவிய நிலையில், ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையைப் பார்வையிட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் சென்று வந்தனர்.

அங்கு இந்த ஆலை எவ்வாறு செயல்படும் என்பது விவரிக்கப்பட்டது. ஆனாலும் திட்டத்தை மாற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, கொடுங்கையூர் குடியிருப்பு சங்கப் பிரதிநிதிகளும் ஹைதராபாத் சென்று வந்ததாகக் கூறுகிறார் சண்முகம்.

"நாங்கள் ஹைதராபாத் சென்று அந்த ஆலை அமைந்துள்ள இடத்தைப் பார்த்தோம். அங்குள்ள மக்களையும் சந்தித்தோம். அவர்கள் அங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதாக ஆய்வுகளை மேற்கொள் காட்டிக் கூறுகின்றனர். இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லை என்று முற்று முழுதாகப் புறந்தள்ளிவிட முடியாது" என்றார்.

'திட்டத்தை எதிர்க்கவில்லை' - கவுன்சிலர்கள் கோரிக்கை என்ன? BBC இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள 37வது வார்டின் கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டில்லி பாபு இந்த ஆலையை கொடுங்கையூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

"குப்பைக் கிடங்கால் ஏற்கெனவே பல சிக்கல்கள் உள்ளன. கொடுங்கையூரைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகளால் நிறைந்தவை.

கழிவுகளைக் கையாள புதிய திட்டங்கள் தேவைதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், கொடுங்கையூரில் இல்லாமல் இந்தத் திட்டத்தை, 8 கிலோமீட்டர் சுற்றளவில் குடியிருப்புப் பகுதிகள் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும்," என்றார்.

TK Shanmugam மணலியில் மூடப்பட்ட எரியூட்டும் நிலையம் மூடப்பட்ட மணலி எரியூட்டும் நிலையம்

சமீபத்தில் மணலியில் செயல்பட்டு வந்த எரியூட்டும் நிலையம் ஒன்று விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டது.

மணலியில் எரியூட்டும் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரிய வந்ததாகக் கூறுகிறார் சண்முகம்.

"மணலி பகுதியில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்தில் கொடுத்துப் பரிசோதித்தோம். அதில் கேட்மியம், லெட், குரோமியம் போன்ற பொருட்கள் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவுகளைவிட அதிகமாக உள்ளது தெரிய வந்தது. அதைவிடக் கூடுதலான திறன் கொண்ட எரியூட்டும் நிலையம் கொடுங்கையூரில் வர உள்ளது. இதனால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்," என்றார்.

பாரிஸ் பயணமும் சென்னைக்கு வந்த கடிதமும் GCC பாரிஸில் சென்னை மேயர் பிரியாவும் துணை மேயர் மகேஷ் குமாரும்

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.ப்ரியா, துணை மேயர் எம்.மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பாரிஸ் சென்று அங்கு செயல்பட்டு வரும் பார்வையிட்டு வந்தனர்.

இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பாரிஸ் சென்று வந்தனர். அதன் பின்னர் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மாநகராட்சி முடிவெடுத்தது.

இந்தச் சூழலில் மே 6ஆம் தேதி அன்று பாரிஸை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Collectif 3R என்கிற சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு சென்னையில் இருந்து வரும் குழுவினருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், "குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளால் பாரிஸிலேயே மாசுபாடு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவே இந்தத் தொழில்நுட்பத்தில் இருந்து விலகிச் செல்கிறது. அதனால் இந்தியா இந்த முடிவை மறுபரிசீலனை செய்து சுழலுக்கு உகந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, கடந்த மே 25ஆம் தேதி வட சென்னையில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்தத் திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

BBC 'மக்களிடம் சென்று பேசுவோம்' - துணை மேயர் மகேஷ் குமார்

ஆனால், மக்கள் இந்தத் திட்டத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் சென்னை மாநகராட்சியின் துணை மேயரான எம்.மகேஷ் குமார்.

"ஐரோப்பிய நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டம் வந்துவிட்டது. நாம் செயல்படுத்துவதே மிகவும் தாமதமானது. இது அவசியமான திட்டம்.

நாங்கள் பாரிஸ் சென்று நேரிலே இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்த்துவிட்டு வந்தோம். பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் இதில் உள்ளன," என்று குறிப்பிட்டார்.

அங்கும் இங்குமாக ஒரு சில பிரச்னைகள் உள்ளன என்பதற்காக திட்டத்தையே முற்றிலுமாகத் தவறு என்று சொல்லிவிட முடியாது என்று கூறும் மகேஷ் குமார், "மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் மேற்பார்வையில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.

அதோடு, "இதனால் மாசுபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது உண்மைதான். நாங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றி முழுமையாகத் தெரிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.