மணிப்பூரில் பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை கூட்டம்: அரசியல் திருப்பம் ஏற்படுமா..?
Seithipunal Tamil June 01, 2025 06:48 AM

மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அங்கு கடந்த மூன்று மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. தற்போது பாஜக எம்எல்ஏக்களின் திடீர் ஆலோசனை நடந்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை முன்னாள் அமைச்சர் தோங்கம் பிஸ்வஜித் சிங்கின் இம்பால் இல்லத்தில் 23 பாஜக எம்எல்ஏக்கள் கூடியதோடு, அவர்கள் மணிப்பூரில் மீண்டும் அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், பாஜக எம்ஏல்ஏக்களின் திடீர் ஆலோசனை நடத்தியதால் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநில மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்டுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் பேட்டியில் அளிக்கையில், ‘44 எம்எல்ஏக்களும் மக்கள் விருப்பப்படி மாநிலத்தில் அரசு அமைக்கத் தயாராக உள்ளனர்’ என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏக்கள் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக மைதேய் மற்றும் குக்கி – ஜோ சமூகங்களுக்கு இடையே நடந்த இன மோதல்களால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நெருக்கடிக்கு அரசியல் உறுதிபாடு, அரசியலமைப்பு பாதுகாப்பு, பாகுபாடற்ற சட்ட நடவடிக்கை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை ஆகியவை அவசியமானவை ஆகிறது என்று  தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மைதேய் மற்றும் குக்கி-ஜோ சமூகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சிவில் சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் மதக் குழுக்களை உள்ளடக்கிய அடிமட்ட அளவிலான சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.