தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?
Vikatan June 02, 2025 07:48 PM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று  கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த   பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு தப்பி ஓடினர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் புதுக்கிராமம் செண்பகாநகரில் வீட்டிற்குள் புகுந்து கஸ்தூரி என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. 

பிரகதீஸ் - கஸ்தூரி

இதைத்தடுக்க வந்த செண்பகராஜ் என்பவருக்கு  கையில் வெட்டு விழுந்தது. கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களை  கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு கொலை சம்பவம் குறித்த   தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் வள்ளுவர்நகர் டாஸ்மாக் கடை வாசலில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனுக்கும்,  செண்பகா நகரில் கொலை செய்யப்பட்ட கஸ்தூரியின் மகன் சதீஷ் மாதவனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் சி.எஸ்.ஆர் ரசீது மட்டும் போட்டு முடித்துள்ளனர் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

சிகிச்சை பெற்று வரும் செண்பகராஜ்

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டு கொலை சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஐந்து தனிப் படைகள் அமைத்து  குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நடந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் கோவில்பட்டியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.