மலையேற்றம் உயிருக்கு ஆபத்தா? முன்னேற்பாடுகள் என்ன?
Dhinasari Tamil June 02, 2025 07:48 PM

%name%

மலையேற்றம் ஆபத்தானதா?

டாக்டர் B.R.J. கண்ணன், மதுரை

மலையேற்றம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கொடுக்கும் விஷயம்தானே?

கண்டிப்பாக. அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நம் முன்னோர்கள் எங்காவது குன்றோ, சிறிய மலையோ இருந்தால் அங்கெல்லாம் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். கடவுளை வழிபடும் நோக்கத்திலாவது மக்கள் மலை ஏற வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

மலை உச்சிக்குச் செல்லும் போது ஆக்சிஜன் அளவு குறையும் என்கிறார்களே?

இது உண்மையல்ல. நாம் ட்ரெக்கிங் (trekking) செல்லத்தக்க பெரும்பாலான மலைகளின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டருக்கும் குறைவான உயரத்தில்தான் உள்ளன. உதாரணத்திற்கு, வெள்ளியங்கிரி மலையின் உயரம் 1800 மீட்டர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒரு பிரச்சனை அல்ல.

சமீபத்தில் மலையேற்றம் செய்து பலர் உயிரிழந்திருக்கிறார்களே?

மலையேற்றத்தால் உயிர் இழப்பது என்பது அசாதாரண நிகழ்வு. ஆயிரக்கணக்கானோர் பல வருடங்களாகச் இது போன்ற மலைகளுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மனமும் உடலும் மேம்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் செய்திகள் ஆகாது. இதுபோன்ற விதிவிலக்காக நடப்பவைகள் தான் செய்திகளாக வெளி வருகின்றன. அவ்வப்பொழுது நடக்கும் விபத்துகளைக் காரணம் காட்டி பேருந்து பயணமோ இரயில் பயணமோ ஆபத்தானது, தவிர்க்கப்பட வேண்டியவை என்று கூறுவது அபத்தம் அல்லவா?

மலையேற்றம் அல்லது உடற்பயிற்சி விஷயங்களில் மக்கள் செய்யவேண்டியது என்ன?

முதலாவது, நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல். சிறிய மலைகளுக்கு, உதாரணமாக அழகர்மலையில் இருக்கும் பழமுதிர்சோலைக்குச் செல்ல தனியாகப் பயிற்சி எதுவும் தேவையில்லை. அதில் ஏற்றமும் குறைவு, தூரமும் குறைவு. ஆனால் சதுரகிரி, வெள்ளியங்கிரி போன்ற மலைகளுக்குச் செல்லும் முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். குறைந்தது ஒரு மாதமாவது நடைப்பயிற்சி, சிறிய ஓட்ட பயிற்சி போன்றவற்றைச் செய்து இதயத்தையும் கால் தசைநார்களையும் பழக்கப்படுத்த வேண்டும். ஐயப்பனுக்குப் பெரியப்பாதையில் செல்பவர்கள், அதிலும் முதல் முறையாக (கன்னிச் சாமியாக) செல்பவர்கள், ஒரு மண்டலம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் அல்லவா?

இரண்டாவது, நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து செயல்படுதல். மலை ஏறும் பொழுது நிதானமும் சீரும் ( ‘slow and steady’ ) என்பதே மந்திரமாக இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தை பலர் 20 நிமிடங்களில் கடப்பார்களானால் ஒரு சிலருக்கு 30 நிமிடங்கள் தேவை. திடீர் மரணம் என்று பேசப்பட்டாலும், அதற்குப் பல மணி நேரங்கள் முன்பாகவே நம் உடல் தன் இயலாமையைப் பல சமிக்ஞைகள் மூலம் தெரிவிக்கும். அதை உணர்ந்து போதிய ஓய்வு எடுத்து, அதன் பின்னரே பயணத்தைத் தொடர வேண்டியது அவசியம். அந்த உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நானும் செய்து காண்பிக்கிறேன் பார் என்று உடலை வருத்துபவர்கள்தான் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

மூன்றாவது உணவும் நீரும். நம் உடம்பிற்கு சக்தி தேவைப்படும் என்பதால் தின்பண்டங்களை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம். அதைவிட முக்கியம் நம் உடம்பில் நீர்நிலை குறையாமல் பார்த்துக் கொள்வது. உப்பு கலந்த நீரையோ, மோரையோ, வேறு பழ ரசங்களையோ அவ்வப்பொழுது குடித்துக்கொண்டே செல்வது மிகவும் அவசியம்.

என்னென்ன நோய் உள்ளவர்கள் மலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டும்?

இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், கால்களின் எலும்புகள் தசைகள் என்று எல்லாமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமாக மலையேறித் திரும்ப முடியும். இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்கான மருத்துவரிடம் முறையாகக் கலந்தாலோசித்து மலையேற்றம் பாதுகாப்பானதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் எல்லோரும் மருத்துவரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டுமோ?

தேவையில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது அல்லவா? அந்தச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால், இளைஞர்கள் (40 வயதுக்குட்பட்டவர்கள்) எந்த ஒரு பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சமயத்தில் ஏதேனும் பிரச்சனை தோன்றும் பட்சத்தில் மருத்துவரைக் கண்டிப்பாக அணுக வேண்டும். நாற்பது வயதிற்கு மேல் முதல் முறையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நாங்கள் இதய ஒலிப்படம் (ECHO), டி எம் டி (TMT) போன்ற பரிசோதனைகளைச் செய்து அறிவுரை வழங்குவோம்.

மலையேற்றத்தில் உங்கள் அனுபவம் என்ன?

மதுரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஏறக்குறைய எல்லா மலைகளிலும் ஏறி இருக்கிறேன். திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஏறும் பாதை சீனப் பெருஞ்சுவரை விட அருமையாகக் கட்டப்பட்டுள்ளது. கீழக்குயில்குடியில் இருக்கும் சமணர் மலையும் நான் அடிக்கடி சென்று வரும் ஓர் இடம். யானைமலை ஏற்றம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வால் வழியாக ஏறினால் சிறிய ஏற்றம், பின்னர் மூன்றரை கிலோமீட்டர் ஏற்றமான நடையாக யானையின் தலை உச்சிவரை சென்று திரும்பலாம். தும்பிக்கை வழியாக ஏறினால், யானையின் கண் பகுதிவரை எளிதாகச் செல்லலாம். அதற்குமேல் தலைப் பகுதிக்குச் செல்வது சற்றுக் கடினம், ஆபத்தானது கூட.

மதுரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் செல்லம்பட்டியில் இருக்கும் திடியன் மலை 215 மீட்டர் உயரம் கொண்டது. வெள்ளியங்கிரி செல்ல நினைப்பவர்கள் இந்த மலையில் நான்கு முறையாவது ஏறி பயிற்சியும் அனுபவமும் பெறலாம். அதேபோல், 610 மீட்டர் உயரம் கொண்ட பிரான்மலையும் நாம் சென்றுவரலாம். இது மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. சதுரகிரிக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசித்துள்ளேன்.

நானும் இன்னும் சில நண்பர்களும் நண்பர் மருத்துவர் கல்யாணசுந்தரம் தலைமையில் கொடைக்கானல், குரங்கணி, கொழுக்குமலை, என்று பல இடங்களுக்கு மலையேறியிருக்கிறோம். தென்னிந்தியாவிலேயே அதிக உயரம்கொண்ட ஆனைமுடியும் (2700 மீட்டர்) இதில் அடங்கும். இரண்டு நாட்கள் நடந்து, இரவில் மின்சார வசதியும் இல்லாத ஒரு மலையில் உறங்கி நாங்கள் சென்றுவந்த மீசப்புலிமலை (2640 மீட்டர்) பயணத்தை என்றென்றும் மறக்க முடியாது.

ஆக, மலை ஏற்றம் மனதிற்கும் உடலுக்கும் ஓர் இதமான அனுபவம். ஏன் நாம் எல்லோரும் இதை அனுபவிக்கக்கூடாது?

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.