லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?
Vikatan May 31, 2025 04:48 PM

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கி. இவர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதனால், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 12 ஆய்வாளர்கள் மற்றும் 6 உதவி துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு, சிறப்பு விஜிலென்ஸ் நீதிபதி பிறப்பித்த தேடுதல் வாரன்ட்டுகளின் அடிப்படையில் சோதனைகளை நடத்தியது.

பைகுந்த நாத் சாரங்கி தொடர்புடைய ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, பைகுந்த நாத் சாரங்கி தனது பிளாட்டின் ஜன்னலுக்கு வெளியே பணக்கட்டுகளை எறிந்து அப்புறப்படுத்த முயன்றார். ஆனால் அதிகாரிகள் அதைத் தடுத்து சோதனைகளை துரிதப்படுத்தினர்.

பைகுந்த நாத் சாரங்கியுடன் தொடர்புடைய இரண்டு இடங்களில் இருந்து மொத்தம் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பைகுந்த நாத் சாரங்கியின் சொத்துக்கள் குறித்த விரிவான மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.