தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி தவறு என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள், 3 அகலப்பாதைத் திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.728 கோடி நிதியையும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படாதது, நிலங்கள் கையகப்படுத்தப்படாதது உள்ளிட்டவற்றை காரணமாகக் கூறி நிதியை திருப்பி அனுப்பியதாக ரயில்வேதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என குற்றம் சாட்டிய அன்புமணி, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கப்படும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் கூட அவற்றை செயல்படுத்தி முடிக்க முடியாது. தமிழகத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? எந்தெந்தத் திட்டங்கள் எந்தெந்த ஆண்டில் நிறைவேற்றி முடிக்கப்படும்? என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை ரயில்வேத்துறை வெளியிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி தவறு என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. திட்டத்தின் நிலை மற்றும் முன்னேற்றத்தைப் பொறுத்து நிதி ஒதுக்கப்படும் எனவும், தாமதம் ஏற்படும் நேரத்தில் நிதி தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு, அடுத்த காலாண்டில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.