இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற கனிமொழி கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக எம்பிக்கள் குழு பல்வேறு பிரிவுகளாக அனுப்பப்பட்ட நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையில் ஒரு குழு ஐந்து நாடுகளுக்கு சென்றது. தற்போது, இந்த குழு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் நிலையில், அங்கு செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது, கனிமொழியிடம் இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி, “வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் எங்களுடைய தேசிய மொழி,” என்று கூறியவுடன், சில நிமிடங்கள் தொடர்ச்சியாக கைதட்டல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், "இந்தியா யாரையும் பழிவாங்க விரும்பவில்லை; நடந்த அநீதிக்கு நீதி கேட்கிறது. இந்தியாவை யாராலும் மிரட்ட முடியாது, இந்தியாவை யாராலும் அடக்க முடியாது என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்றும் கனிமொழி தெரிவித்தார்.
"இந்திய குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நமது அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
"காஷ்மீரை பாதுகாப்பான மாநிலமாக வைத்திருக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு. இந்தியா எப்போதும் பாதுகாப்பான நாடாகவே இருக்கும்" என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.
Edited by Siva