பொறுப்பற்ற நிர்வாகம், பாதுகாப்பில் தோல்வியால் உயிரிழப்பு: கர்நாடக அரசை விமர்சித்துள்ள பாஜக..!
Seithipunal Tamil June 05, 2025 09:48 AM

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 18 வருடங்களில் முதன் முறையாக சாம்பியன் நேற்று வென்றது.  இதனால் அணியின் வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க வந்த வீரர்களை பார்ப்பதற்காக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில்,  கர்நாடக காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தின் காரணமாக 11 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. 

இந்நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தும் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும், இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் தடியடி நடத்த முடியவில்லை என்றும் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளதோடு, இதற்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மாநில பா.ஜ., கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ' முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்  செல்பி எடுப்பதிலேயே கவனம் செலுத்தியதாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், உரிய முன்னேற்பாடு செய்யாமல் அவசரப்பட்டு விட்டதாகவும், பொறுப்பு அற்ற நிர்வாகத்தால் 11 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், அவசர அவசரமாக வெற்றி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு முன்னேற்பாடு செய்யவில்லை. இதற்கு முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டுமெனவும்,  சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.,வைச் சேர்ந்த சலவாடி நாராயணசுவாமி கூறுகையில், '' அரசால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் வருவார்கள்..? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் பாதுகாப்பில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.