பத்திரம் மக்களே... தொடர் கனமழையால் 10 பேர் பலி... இன்றும் ரெட் அலெர்ட்!
Dinamaalai May 31, 2025 05:48 PM

 


கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். தற்போது  கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து NDRF விரைந்துள்ளது.


இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்திருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, கோட்டயம், கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று மே 31ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளனர்.

கேரளாவில் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா   9 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  
 
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்துள்ளனர்.  பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.