தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் (42). இவர் பாவூர்சத்திரம்- கடையம் மெயின் ரோட்டில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமா (37). இவர்களுக்கு தினேஷ் (17), திலிப் (15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பரமசிவன் வழக்கம்போல் குடும்பத்தினருடன் தூங்கினார்.
நேற்று அதிகாலையில் பரமசிவன் கண்விழித்ததும் அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார். உமா வீட்டின் தரைத்தளத்திலும், தினேஷ், திலிப் ஆகியோர் மாடியில் உள்ள அறையிலும் தூங்கி கொண்டிருந்தனர். இந்தநிலையில், மர்ம நபர் வீடுபுகுந்து உமாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் பரமசிவன் தனது வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் ரத்த வெள்ளத்தில் மனைவி உமா கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் டிஎஸ்பி போஸ், இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இறந்த உமாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உமாவை கொலை செய்த மர்மநபர் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் தப்பி சென்றதும், அப்பகுதியில் உள்ள கிணற்றில் கத்தியை வீசியும் சென்றார். அவர் நடந்து சென்ற இடத்தில் ரத்த துளிகள் சிதறி கிடந்தன. இதையடுத்து கிணற்றில் கிடந்த ரத்தம் தோய்ந்த கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
கொலை நடந்த இடத்தில் போலீசாரின் மோப்ப நாய் மோப்பம் பிடித்து விட்டு, கத்தி கிடந்த கிணறு வரையிலும் சென்று சிறிது தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மர்மநபரை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். கொலை நடந்தபோது அப்பகுதியில் உள்ள செல்போன் எண்கள் குறித்து ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.