உத்தரவு வரல... சுங்கக்கட்டணம் வசூல நிறுத்தமுடியாது... லாரி உரிமையாளர்கள் போராட்டம்!
Dinamaalai June 04, 2025 07:48 PM

மதுரை புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என மதுரை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.  சுமார் 135 கி.மீ தூரம் கொண்ட தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டனம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சுங்கச்சாவடி கட்டண வசூல் செய்யும் நிறுவனம் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 27000 மரக்கன்றுகள் நட வேண்டும்.   சாலையின் நடுவே உள்ள சென்ட்ரல் மீடியன் பகுதியில் 68 ஆயிரம் அரளி செடி உள்ளிட்ட செடிகளை நட வேண்டும் என விதிமுறை உள்ளது.  ஆனால் இந்த விதிமுறைகள் தற்போது வரை பின்பற்றப்படவில்லை.  முறையாக சாலைகள்  பராமரிக்கப்படவில்லை ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலையில்  ஒளிரும் விளக்குகள் அமைக்கப்படவில்லை, சுங்கச்சாவடி அருகே கழிப்பிடம் குடிநீர் வசதிகளும் செய்து தரவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

 
இந்நிலையில்  தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஜனவரி மாதம் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளாட்  அமர்வு  முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை உத்தரவு விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.  
ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது வரை தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலறிந்து  புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு வந்த பாலகிருஷ்ணன், அவரது வழக்கறிஞர் ஹரிராகவன் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்   சுங்கச்சாவரி நிர்வாகிகளிடம் நீதிமன்ற உத்தரவைக் கூறி  சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தும்படி  கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஆனால் டோல்கேட் நிர்வாகம் தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை  உத்தரவு வந்த பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடி முன்பாக லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   இருதரப்பினரும் வாக்குவாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.