ராமதாஸ் - அன்புமணி இடையிலான 45 நிமிட சந்திப்பில் என்ன நடந்தது? பாஜக கூறுவது என்ன?
BBC Tamil June 06, 2025 12:48 PM
X/GKMANI

'கட்சிக்கு யார் தலைவர்?' என்ற மோதல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே வலுத்து வரும் நிலையில், ஜூன் 5 அன்று இருவரும் நேரில் சந்தித்தது பேசுபொருளாக மாறியது.

'இருவரும் சமாதானம் அடைய வாய்ப்புகள் இல்லை. ராமதாஸ் தன்னை நம்புகிறார். அன்புமணி டெல்லியை நம்புகிறார்' என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 8 அன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவிருக்கும் சூழலில், சமாதான முயற்சி நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், 'இது தனிப்பட்ட சந்திப்பு' என பா.ம.க கூறுகிறது. தந்தை-மகன் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதா?

ராமதாஸ் - அன்புமணி மோதல் தீவிரம்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்துப் பேசி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூரில் கடந்த மே 30 முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்துப் பேசி வந்தார். கட்சியின் நிர்வாகிகள் பலரும் தன் பக்கம் இருப்பதை வெளிக்காட்டவே இவ்வாறு அன்புமணி கூட்டத்தைக் கூட்டியதாக கருதப்பட்டது.

இதன் காரணமாக, பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா உள்பட மாவட்ட செயலாளர்களில் பலரை ராமதாஸ் நீக்கினார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையது மன்சூரை பொருளாளராக ராமதாஸ் நியமித்தார்.

இதை ஏற்க மறுத்து, திலகபாமாவை மீண்டும் பொருளாளராக அன்புமணி நியமித்தார். கட்சியின் தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை சேர்க்கும் அதிகாரம் தனக்கே உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் அறிவித்தார்.

Thilagabama அன்புமணி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக, பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா உள்பட மாவட்ட செயலாளர்களில் பலரை ராமதாஸ் நீக்கியிருந்தார், இதை ஏற்க மறுத்து திலகபாமாவை மீண்டும் பொருளாளராக அன்புமணி நியமித்தார்.

தற்போது வரை 31 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஒன்பது பேரை ராமதாஸ் நீக்கியுள்ளார். புதன்கிழமையன்று மட்டும் ராணிப்பேட்டையில் 10 ஒன்றிய செயலாளர்கள், தலைவர்கள், நகர செயலாளர் ஒருவர், மூன்று பேரூர் செயலாளர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், வியாழக்கிழமையன்று (ஜூன் 5) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையின் விவரங்கள் எதுவும் வெளியில் வரவில்லை.

பா.ம.க நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, பெயர் குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களைத் தெரிவித்தார்.

"இருவரும் பேசிக் கொள்ளவில்லை. 'கிராமம்தோறும் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளை அன்புமணி மேற்கொள்ள வேண்டும்' என ராமதாஸ் கூறினார். அதன்பிறகு, தலைவர் பதவியைக் கொடுப்பதைப் பற்றி முடிவு செய்யலாம் என்றார். சந்திப்பில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை" என்கிறார்

தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அன்புமணி வெளியேறிய பிறகு, 'துக்ளக்' ஏட்டின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்துப் பேசியுள்ளனர்.

பா.ஜ.க சமாதான முயற்சி?

தந்தை-மகன் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் 'தராசு' ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மதுரைக்கு அமித் ஷா வருவதற்கு முன்பே இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்பட்டுவிட வேண்டும் என நினைக்கின்றனர். அதற்காக, ஆடிட்டர் குருமூர்த்தியை பா.ஜ.க அனுப்பியுள்ளது" எனக் கூறுகிறார்.

கடந்த ஏப்ரல் 11 அன்று அ.தி.மு.க-பா.ஜ.க இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் ஷ்யாம், "அ.தி.மு.க உடன் கூட்டணியை அறிவிப்பதற்கு முன்னதாக, ஆடிட்டர் குரூமுர்த்தியை அமித் ஷா சந்தித்தார். இப்போது, ஆடிட்டர் குருமூர்த்தியை அனுப்பி ராமதாஸை சந்திக்க வைத்துள்ளார்" என்கிறார்.

Tarasu Shyam தந்தை-மகன் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார், 'தராசு' ஷ்யாம்

தந்தையும் மகனும் இணங்கிப் போவதே நல்லது என பா.ஜ.க தரப்பில் இருந்து பேசப்பட்டதாகக் கூறும் ஷ்யாம், "உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் -அகிலேஷ் யாதவ் ஆகியோர் இடையே ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியில் அக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை பா.ஜ.க தரப்பில் விளக்கியுள்ளனர்" என்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் குறையக் கூடாது என்பது அமித் ஷாவின் நோக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"பிளவுபட்ட பா.மக-வை பா.ஜ.க விரும்பவில்லை" எனக் கூறும் ஷ்யாம், "பா.ம.க பலவீனம் அடைந்தால் வன்னியர் சமூக வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என பா.ஜ.க நினைக்கிறது. ஆனால், அன்புமணி செயல் தலைவர் தான் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருந்தால் பிரச்னை முடிவடைய வாய்ப்பில்லை" என்கிறார்.

S.R.SEKHAR/X தங்களுடைய கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி என்பதால் பா.ம.க-வின் குடும்ப பிரச்னையைப் பற்றி பா.ஜ.க கவலைப்படுகிறது என்கிறார் எஸ்.ஆர். சேகர்

"ராமதாஸ், அன்புமணியை சமாதானம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளதா?" என அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க தொடர்கிறது. இது உணர்வுபூர்வமான கூட்டணி என்பதால் பா.ம.க-வின் குடும்ப பிரச்னையைப் பற்றி பா.ஜ.க கவலைப்படுகிறது" என்கிறார்.

"இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையை சரிசெய்வதற்கான வழியை பா.ஜ.க தேர்வு செய்யும்" எனக் கூறும் எஸ்.ஆர்.சேகர், "இதனை அமித் ஷாவின் மதுரை வருகையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை" எனக் கூறினார்.

பா.ஜ.க கூட்டணியை விரும்பாத ராமதாஸ்?

அதேநேரம், பா.ஜ.க கூட்டணியை ராமதாஸ் விரும்பவில்லை எனக் கூறும் ஷ்யாம், " 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தனது வீட்டின் முன்பு பாரத் மாதா கி ஜே என்ற கோஷம் கேட்டதாகவும் அண்ணாமலை வந்திருந்ததாகவும் ராமதாஸ் கூறினார். அவருக்கு அதில் விருப்பமில்லை என்ற தொனியில் ராமதாஸ் பேசினார்" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

இதே கருத்தை முன்வைக்கும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "அன்புமணி கூறியதால் சமரச முயற்சிக்காக ஆடிட்டர் குருமூர்த்தி செல்கிறார். பா.ஜ.க கூட்டணியை ராமதாஸ் விரும்பவில்லை. அ.தி.மு.க-பா.ஜ.க அணியில் இணைவதைவிட தனியாக செல்வதே நல்லது என அவர் நினைக்கிறார்" எனக் கூறுகிறார்.

DrRamadoss/Facebook "2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தனது வீட்டின் முன்பு பாரத் மாதா கி ஜே என்ற கோஷம் கேட்டதாகவும் அண்ணாமலை வந்திருந்ததாகவும் ராமதாஸ் கூறினார்."

மாமல்லபுரத்தில் பா.ம.க சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு (மே 11) மாநாட்டில், "முன்பு யானை சின்னத்தில் தனியாகப் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வெற்றி பெற்றோம். ஆனால், கூட்டணியாக நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம்" என ராமதாஸ் பேசினார்.

"கூட்டணிகளால் பலன் இல்லை என்பதையே ராமதாஸின் இந்தப் பேச்சு எடுத்துக் காட்டியது" எனக் கூறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.

இதனை மறுக்கும் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "கோபத்தில் வருகின்ற வார்த்தைகளுக்கு தனியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒரே சிந்தனையில் நடப்பார்கள் எனவும் கூற முடியாது" எனக் குறிப்பிட்டார்.

ராமதாஸை அன்புமணியால் நீக்க முடியுமா?

"மோதல் விவகாரத்தின் அடுத்தகட்டமாக, அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கும் முடிவை எடுக்கலாம். தனது கட்டுப்பாட்டில் கட்சி உள்ளதால் ராமதாஸை அன்புமணி நீக்கும் முடிவை நோக்கியும் செல்லலாம்" என தான் கருதுவதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

அதேநேரம், பா.ம.கவின் சட்டவிதிகள் ராமதாஸுக்கு சாதகமாக உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் நிறுவனருக்கு மட்டுமே உள்ளது. பா.ம.க தேசிய செயற்குழுவில் உள்ள ஏழு பேரில் 4 பேர் ராமதாஸ் பக்கம் உள்ளனர். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அன்புமணி உள்ளார்" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

DrRamadoss/Facebook "பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் நிறுவனருக்கு மட்டுமே உள்ளது."

பா.ம.க தேசிய செயற்குழுவில் நிறுவனர் ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி, தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, ஊடக தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அன்புமணி நடத்திய கூட்டங்களில் வடிவேல் ராவணன் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.

"தேசிய செயற்குழுவில் உள்ள ஏழு பேரில் 4 பேர் ராமதாஸ் பக்கம் உள்ளனர். பொதுவெளியில் வெளியாகும் புகைப்படங்களை வைத்து இவ்வாறு கூறுகிறேன். இந்தக் கூட்டத்தைக் கூட்டி தனக்கு தேவையானதை ராமதாஸால் சாதித்துக் கொள்ள முடியும். அன்புமணிக்கு இது சவாலாக உள்ளது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

இதே கருத்தை முன்வைத்து ஜூன் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், "பா.ம.க-வின் அமைப்பு விதிகளின்படி, கட்சியின் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் உள்ளவர்கள் ராமதாஸ் வழிகாட்டுதலின்பேரில் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

பா.ம.க சட்டவிதிகளின்படி அனைத்து அதிகாரங்களும் ராமதாஸிடம் உள்ளதாகக் கூறிய பேராசிரியர் தீரன், "ராமதாஸ் கைகாட்டும் நபர்களை ஏற்றுக் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் செயல்படுவோம். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை மட்டுமே ராமதாஸ் நீக்கி வருகிறார்" எனவும் தெரிவித்தார்.

"சமாதானம் ஏற்பட வாய்ப்பில்லை என இருவருக்கும் தெரியும். பா.ஜ.க கூறியதால் கடைசிநேர முயற்சிகள் நடைபெறுகின்றன. வன்னியர் சங்கம், சொந்த சாதியின் ஒற்றுமை ஆகியவற்றை ராமதாஸ் விரும்புகிறார். அன்புமணி டெல்லியை நம்புகிறார். அவ்வளவு தான் வித்தியாசம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

அன்புமணி ஆதரவு அணியில் உள்ள பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம், இதுதொடர்பாக பிபிசி தமிழ் பேசியது.

"கட்சியின் நிறுவனரை, தலைவர் சந்தித்துள்ளாரா அல்லது தந்தையை மகன் சந்தித்துள்ளாரா எனத் தெரியவில்லை. இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு. ஆகவே, அது குறித்து பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.