நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கோழி பண்ணையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது, "இந்தியாவிலேயே தற்போது முட்டைக்கு அதிக விலை கிடைப்பது நாமக்கல் மண்டலத்தில்தான்.
நாடு முழுவதும் முட்டை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் இம்மண்டலத்திலிருந்து தினசரி சுமார் 80 லட்சம் முட்டைகள் வெளியேற்றப்படுகின்றன.
பொதுவாக அரபு நாடுகள் பெரிய அளவில் முட்டைகளை இறக்குமதி செய்கின்றன. தற்போது, அமெரிக்காவுக்கும் முட்டை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முட்டை ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பு உருவாகும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் விலை மேலும் உயரக்கூடும் என்றார்.