இது ஒன்றும் பாஜக மாடல் அல்ல துணி கட்டி மறைக்க - விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்த CM ஸ்டாலின்!
Seithipunal Tamil June 03, 2025 07:48 AM

மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக பந்தல்குடி எனுமிடத்தில் தூர்வாரப்படாத கால்வாய்யை திரையிட்டு மறைத்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

3 வருடங்களாக அந்த பகுதி மக்கள் கால்வாய்யை தூர்வார கோரிக்கை விடுத்தது வருவதாகவும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், முதல்வர் கண்ணுக்கு தெரியாதபடி அதனை திரையிட்டு மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அன்றைய தினம் இரவே, திரைகளை அகற்றியதுடன், முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நடவடிவக்கை எடுக்க உத்தரவும் பிறப்பித்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். 

துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, திமுகவை விமர்சிப்பதையே முழுநேர , பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்” என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.