சிதறுகிறதா நாம் தமிழர் படை? சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி... சேலம் மாவட்ட தலைவர் விலகல்!
Dinamaalai June 03, 2025 01:48 PM

பாமகவில் தந்தை - மகன் ஈகோ யுத்தம் தலைவிரித்தாடும் நிலையில், பாமகவுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி சிதறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதனை நிஜமாக்கும் வகையில் அடுத்தடுத்து அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் சீமானுக்கு அடுத்த அதிர்ச்சியாக, தற்போது சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.  

கட்சி கட்டமைப்பு என்று சீமான் எடுத்து வருகின்ற முடிவு களத்தில் உண்மையாக உழைத்தவர்களை உதாசீனப்படுத்துவதாக உள்ளதாக  கண்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா வணக்கம் 2010ல் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்த காலத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற கட்சி என்பதற்காக பயந்த சாமானியர்கள் மத்தியில் சேலம் மாவட்டத்தில் நான் நாம் தமிழர் கட்சிக்காரன் என்றும் செந்தமிழன் சீமானின் தம்பி என்று வரிந்து கட்டிக்கொண்டு பேரறிவிப்பு செய்து பிரகடனப்படுத்தி கொண்டும் நான் கட்சியில் செயல்பட்டேன்.

துவக்க காலத்தில் சேலத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா வரையிலும் கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ரயில் மறியல் உள்ளிட்ட அனைத்து நிலை கலங்களிலும் பங்கேற்று பணியாற்றி போராடி என் மனைவியுடன் 2013ல் கைதாகி உள்ளோம் மற்றும் நடந்து முடிந்த சட்டமன்ற பாராளுமன்ற பேரூராட்சி உள்ளாட்சி இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியும், கட்சியினரை நேசித்தும், ஒருங்கிணைத்தும், மேடைகளிலும் கட்சி வேட்பாளர்களுடனும் வாகனப் பிரச்சாரத்திலும் உரை நிகழ்த்தி தேர்தல் காலங்களில் ஒரு நாள் கூட இடைவிடாது களப்பணி செய்தேன் எவ்வித எதிர்பார்ப்பும் சுயநலமும் இல்லாமல் அடர்த்தியான ஏழ்மை வறுமை நிலையிலும் கட்சியில் தீவிரமாக செயல்பட்டேன். 
 
கட்சி வழங்கிய தொகுதி இணைச் செயலாளர். அதன் பிறகு சேலம் மாநகர மாவட்ட தலைவர் பொறுப்பினை ஏற்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடு தத்துவரீதியாக கற்பித்தும் ஒருங்கிணைத்தும் கட்சியினரை வழி நடத்தி வந்தேன். கட்சியில் மிக தீவிரமாக செயல்பட்டதன் விளைவாக எனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள் இழப்புகள் சொல்லில் அடங்காதவை.

இருந்த போதிலும் கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தொடர்ந்து போராடி வந்தேன். ஆனால் கட்சி கட்டமைப்பு என்று வரும் போது தாங்கள் எடுத்து வருகின்ற முடிவுகள், அறிவிப்புகள் என் போன்ற களத்தில் உண்மையாக உழைத்தவர்களுக்கும் களத்தின் முன்னோடிகளையும் உதாசீனப்படுத்தி புறக்கணிக்கும் முகமாகவே அமைந்து வருகிறது.

கட்சிக்காக எனது நெடுநாள் மிகவும் கடின உழைப்பை உணராத உங்கள் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய வேலையில் நாம் தமிழர் கட்சியில் இனி பயணிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சியின் முன்னாள் சேலம் மாநகர மாவட்ட தலைவர் கண்ணனாகிய நான் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அண்ணா உண்மையில் சேலத்தில் நாம் தமிழர் என்னும் தத்துவ மரத்தை தாங்கி பிடித்த வேர்களில் நானும் ஒரு வேர் அண்ணா. எனது உடலில் மூச்சுக்காற்று உள்ளவரை தமிழ் தேசிய பாதையில் எனது பயணம் தொடரும். என்னுடன் உழைத்த நாம் தமிழர் கட்சியினருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.