மத்தியப் பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி (30) கடந்த மாதம் சோனம் (27) என்பவருடன் திருமணம் செய்துகொண்டு, மே 23ல் மேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் தேனிலவுக்காக பயணமானார்.
ஷில்லாங் வழியாக இருசக்கர வாகனத்தில் சோஹ்ரா சென்ற தம்பதியர், நான்கிரியாட் கிராம விடுதியில் தங்கினர்.
அடுத்த நாள் (மே 24) முதல் இருவரும் தொடர்பில் இல்லாமல் போனதால், அவர்களை தேடும் முயற்சி தீவிரமடைந்தது. போலீசார் தேடலில் இறங்கியபோது, வாடகை வாகனம் சோஹ்ரா ரிம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள அருவிக்கரையில், ராஜாவின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் இருந்த டாட்டூ அடிப்படையில் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டனர். ஆனால், அவர் அணிந்திருந்த நகைகள், பர்ஸ், மொபைல் உள்ளிட்டவை காணவில்லை.
மேலும், அவரது மனைவி சோனம் ஏதும் தகவல் இல்லாமல் மாயமாகியுள்ள நிலையில், போலீசார் சோனத்தையும் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் ஒரு வெள்ளை சட்டை மற்றும் உடைந்த மொபைல் கைப்பேசியும் மீட்கப்பட்டுள்ளது.
ராஜா ரகுவன்ஷியின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலையா? சோனம் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேகாலயா போலீசுடன் இணைந்து மத்தியப் பிரதேசம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.