ஜூன் 4ஆம் தேதி, ஒரு கிரிக்கெட் நிகழ்வில் ஏற்பட்ட மிக மோசமான கூட்ட நெரிசலை பெங்களூரு நகரம் கண்டது. இதற்கு காரணம், அரசாங்கம், காவல்துறை, கிரிக்கெட் நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல அதிகார மையங்களின் தோல்வி.
இதன் பல விஷயங்கள், நிர்வாகம் மற்றும் அதன் முடிவுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தக் கேள்விகள் அனைத்திற்குமான பதில்களுக்கு, ஒரு சில உண்மைகள் மற்றும் ஊகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) வெற்றி பெற்றதன் மகிழ்ச்சி இந்தியாவின் ஐ.டி. தலைநகரமான பெங்களூருவில் மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அது எல்லை மீறியது.
செவ்வாய் (ஜூன் 3) மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பட்டாசு வெடித்து அந்த வெற்றி கொண்டாடப்பட்டது. அதிகாலை 3 மணி வரை நகர காவல்துறை பல பகுதிகளில் தயார் நிலையில் இருந்தது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஜூன் 4ஆம் தேதி காலை 7.01 மணிக்கு விதான் சவுதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்த அணிவகுப்பு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் 3.14 மணிக்கு ஆர்சிபி தரப்பில் இருந்து வெற்றி அணிவகுப்பு குறித்து வெளியான மற்றொரு பதிவில், இலவச பாஸ்களை அதன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆர்சிபிக்கு அனுமதி அளித்தது யார்?வெற்றி அணிவகுப்பு குறித்த அறிவிப்பை காலை வேளையில் ஆர்சிபி வெளியிட்டது. அப்படியிருக்க, ஜூன் 4 அதிகாலை 1.45 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்திற்குள் அதற்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
"கடைசி ஓவர் வரை, யார் கோப்பையை வெல்வார்கள் என்று நமக்குத் தெரியாது. ஜூன் 4 ஆம் தேதி ஆர்சிபி அணி பெங்களூருக்கு புறப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தேவையான ஏற்பாடுகளைச் செய்ய நகர காவல்துறையினருக்கு நேரம் இருந்ததா? இது எளிதான காரியம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று கர்நாடக முன்னாள் டிஜிபி எஸ்.டி. ரமேஷ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
இந்த ஏற்பாடுகளின் போது யார் எங்கிருந்து வருவார்கள், யார் எங்கிருந்து செல்வார்கள், அந்த நேரத்தில் கூட்டம் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில், எந்த குற்றமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய கூட்டம் கூடும் போது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய நபர்களைக் கண்காணிப்பது முக்கியம். பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டு, அதுகுறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
"சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இருக்கிறது. எனவே இதைத் திட்டமிட காவல்துறைக்கு நேரம் இருந்ததா? இவ்வளவு குறுகிய காலத்தில் காவல்துறையைத் திரட்டுவது என்றால் அண்டை மாவட்டங்களிலிருந்தும் காவல்துறையைத் திரட்ட வேண்டியிருக்கும். நகர காவல்துறைக்கு இதையெல்லாம் செய்ய நேரம் இருந்ததா? இதைப் பற்றியெல்லாம் யாருக்கும் எதுவும் தெரியாது" என்று ரமேஷ் கூறுகிறார்.
அதிகாரப்பூர்வமாக, பெங்களூரு நகர காவல்துறை மாலை 5 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இதனுடன், பிற்பகல் 3.28 மணிக்கு சமூக ஊடகப் பக்கத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவிக்கும் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இது சாலை நிகழ்ச்சியா (Road show) அல்லது திறந்த பேருந்தில் அணிவகுப்பு செல்லும் நிகழ்வா என்பது குறிப்பிடப்படவில்லை.
இந்த சமயத்தில், விதான் சவுதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி அணிவகுப்பை நடத்த ஆர்சிபி-க்கு அனுமதி வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து காவல்துறையினரிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வரவில்லை.
புதன்கிழமை நண்பகலில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெற்றி அணிவகுப்பை இவ்வளவு விரைவாக நடத்த முடியாது என்று ஏன் தெரிவிக்கப்படவில்லை? அரசாங்க மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுதான்.
"இது சாத்தியமில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லியிருக்க வேண்டும். அதிகாரிகள் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் ஆர்சிபி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து, அதில் உள்ள சிரமங்களை விளக்கியிருக்க வேண்டும். ஒருவேளை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட விஷயம் சாத்தியமில்லை என்று முதலமைச்சரிடமோ அல்லது உள்துறை அமைச்சரிடமோ தெளிவாகச் சொல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதை நான் சொல்ல முடியும்," என்கிறார் ரமேஷ்.
ரமேஷ் கூறியதைப் போலவே, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி பிபிசி ஹிந்தியிடம், "இது ஒரு அரசியல் முடிவு. (விழாவை அனுமதிப்பது) காவல்துறையின் முடிவு அல்ல. உண்மையில், இத்தகைய விழாவை சில நாட்களுக்குப் பிறகு, அதாவது கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றியின் உற்சாக மனநிலையில் இருந்து வெளியே வந்தபிறகு நடத்தியிருக்க வேண்டும். அப்போது கூட்டம் குறைந்திருக்கும். கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கும், இதுபோன்ற அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம்" என்று கூறினார்.
இருப்பினும், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "முழு நிகழ்வையும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் ஆர்சிபி நிர்வாகம் தான் ஏற்பாடு செய்தன. அரசாங்கம் இந்த விழாவில் பங்கேற்க மட்டுமே செய்தது" என்றார்.
"அரசாங்கம் விழாவில் கலந்துகொள்ள மட்டுமே செய்தது என்றால், துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்சிபி அணியை வரவேற்க விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
கூட்ட நெரிசலை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, ஆர்சிபி வலைத்தளம் வழியாக இலவச பாஸ்கள் கிடைத்ததால், சின்னசாமி மைதான வாயில்களில் மக்கள் உள்ளே நுழைய முயற்சித்ததால் மட்டுமே குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் மைதானத்தை அடைவதற்கு முன்பே 32 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பிவிட்டதால், மைதான ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தனது அறிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு