இந்தியாவில் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்கள் தயாரிப்பு... டசால்ட், டாடா நிறுவனங்கள் ஒப்பந்தம்!
Dinamaalai June 07, 2025 03:48 AM

 


இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிப்பது தொடர்பாக பிரான்சின் டசால்ட் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

இந்த விமானங்கள் இதுவரை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே அதனை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அது தயாரிக்கப்பட உள்ளது. முழு விமானமும் இந்தியாவில் தயாரிக்கப்படாது. விமானத்தின் உடல்பாகம் மட்டும் இங்கே தயாரிக்கப்படும்.

இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. உற்பத்தி பரிமாற்றம் தொடர்பான 4 ஒப்பந்தங்களில் அவை கையெழுத்திட்டுள்ளன. அதாவது விமானத்தின் கூம்பு வடிவ முன்பகுதி, மையப்பகுதி, பின்புற பகுதி மற்றும் பின்புற பக்கவாட்டு பகுதி ஆகியவற்றுக்காக 4 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் விமானத்தின் கூண்டு பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் விமான உடல் பாகங்களின் முதல் பகுதி 2028-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாதம் 2 உடல்பகுதிகள் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.  இந்திய அரசின் 'மேன் இன் இந்தியா' மற்றும் ஆத்ம நிர்பார் முயற்சிகளுக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் உறுதுணை புரிந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.