மராட்டிய மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண் அபிலாஷா (25 வயது). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு தனது தோழி வசித்து வரும் ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள கிரவுன் கிரீன் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். அங்கு லிப்ட் வழியாக ஏறி 21-வது மாடிக்கு சென்றார்.
பின்னர் திடீரென 21-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறிய அபிலாஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தனது தோழி வசிக்கும் கட்டிடத்திற்கு சென்ற அபிலாஷா, தோழியை சந்திக்காமலேயே கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்த ஐ.டி. பெண் ஊழியர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில், "நான் வாழ்ந்து முடித்து விட்டேன். இனி வாழ விருப்பமில்லை. இந்த முடிவை எடுத்ததற்காக எனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. இது குறித்து பிம்ப்ரி சிஞ்ச்வாட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.