இன்று ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னையில் மின்சார பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை படிப்படியாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்துகள் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இப்பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களே அவற்றை இயக்கும் வகையில் டெண்டா் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் சாதாரண கட்டணப் பேருந்து, விரைவு, குளிா்சாதனப் பேருந்து என அனைத்து வகை பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை முதல்கட்டமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் பராமரிப்பு தேவைகளுக்காக சென்னையில் 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கும் இப்பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.