கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தான் காதலித்து வந்த பெண்ணின் வீடு புகுந்த காதலன், கல்லூரி மாணவியை வெறித்தனமாக கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மகள் அஸ்விதா (19) இவர் கோவை மலைமுச்சம்பட்டி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி அஸ்விதாவை ஒருதலை காதலாக ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அஸ்விதா வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில் திடீரென அஸ்விதாவின் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டுள்ளது. அஸ்விதாவின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்றுப் பார்த்தபோது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்ட நிலையில் அஸ்விதா மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சிஸ்டி சிங் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் மாணவி தனியாக வீட்டில் இருந்த போது வீட்டிற்கு வந்து சென்ற நபர் யார் என்பதும் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் வடுகபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.