கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து... 19 பேர் பலி... இந்தோனேசியாவில் 5வது நாளாக தொடரும் மீட்புப்பணி!
Dinamaalai June 03, 2025 01:48 PM

இந்தோனேசியாவில் கல் குவாரியில் ஏற்பட்ட திடீர் சரிவு விபத்தில் இது வரையில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், தொடர்ந்து 5வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில்  தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த போது திடீரென கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது.

இதில் குவாரியில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 6 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனாலும், இந்த விபத்தில் ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை குவாரி விபத்தில் மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்க இன்று 5வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து 5 நாட்கள் ஆகும் நிலையில் அந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.