சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பனிப்பொழிவு மிகுந்த பகுதிகளான ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 2026, அக்டோபர் 1-ஆம் தேதி இந்த கணக்கெடுப்பு தொடங்கும். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான குறிப்பு தேதியாக கணக்கில் கொள்ளப்படும்.
இவை தவிர, நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1 ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948, பிரிவு 3-இன்படி, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசிதழில் வரும் 16 -ஆம் தேதி (ஜுன் 16) வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011- இல் நடத்தப்பட்டது. அடுத்து 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஏப்ரல் - செப்டம்பர், 2020 மற்றும் பிப்ரவரி 2021 என இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படியே முதல்கட்ட கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020, ஏப்ரல் 1 -இல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான களப்பணியை துவக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான கால அட்டவணையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த முறை சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 மற்றும் கணக்கெடுப்பு விதிகள், 1990 -இன் கீழ், இந்தியாவில் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.