மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களின் வாழ்நாளை இரட்டிப்பாக்கும் புதிய மருந்து கண்டுபிடிப்பு
BBC Tamil June 06, 2025 08:48 PM
Getty Images

சமீபத்தில் கண்டறியப்பட்ட மருந்து ஒன்று குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுடன் வாழும் மக்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை தற்போது வேல்ஸில் உள்ள என்.எச்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிக்கு முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட க்வென் பச்சன் (62), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கேபிவசெர்டிப் (capivasertib) என்ற இந்த மருந்து அவருடைய மகன் திருமணம் செய்து கொள்வதை பார்க்கும் வாய்ப்பை அளிக்கும் என்றும், அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்றும் கூறுகிறார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனை எடுத்துக் கொள்ளும் பெண்கள் இந்த கேபிவசெர்டிப் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் 'வாழ்நாள்' இரட்டிப்பாகும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சுட்டியுள்ளன.

கேபிவசெர்டிப் மாத்திரையின் செயல் திறனை ஆய்வுக்குட்படுத்தும் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் ராப் ஜோன்ஸ், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறிது காலம் கூடுதலாக வாழும் வகையில் இந்த மாத்திரை உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

பிரிட்டனில், ஏழில் ஒரு பெண் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகிறார். நோய் கண்டறியப்பட்ட பிறகு, 75% பெண்கள் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றனர்.

வேல்ஸில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதம் தேசிய சுகாதார சேவையில் (NHS) அறிமுகம் செய்யப்பட்ட இந்த மருந்தை கார்டிஃப் பல்கலைக்கழகம் மற்றும் வெலின்ந்ரே புற்றுநோய் மையம் இணைந்து உருவாக்கியுள்ளன.

BBC புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் க்வென் பச்சன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மருந்தால் புது நம்பிக்கை கிடைத்ததாகக் கூறுகிறார் புது நம்பிக்கை அளிக்கும் மருந்து

புற்றுநோய் கண்டறியப்பட்டு அதற்காக முதன்முறையாக சிகிச்சை மேற்கொண்ட போது, அது க்வெனுக்கு பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

ஆனால் தற்போது, மார்பகப் புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஹார்மோன் தெரபியோடு சேர்த்து கேபிவசெர்டிப் மருந்தை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் க்வென் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியோடு வாழ இயலும்.

புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளிடம் காணப்படும் பொதுவான கோளாறு க்வெனிடமும் காணப்படுகிறது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்த மருந்து, அந்த நிலையை சீராக்குவது கண்டறியப்பட்டது.

"எனக்கு இரண்டாம் முறையாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய வாழ்நாள் அதிகரிக்கும் என்று கூறும் போது, நம்பிக்கையை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும்," என்று வால் ஆஃப் க்ளமோர்கனில் வசித்து வரும் க்வென் பச்சன் தெரிவிக்கிறார்.

"இந்த முதல் கட்ட சிகிச்சைக்கு முன்பு என்னுடைய வாழ்நாளானது 5 அல்லது 6 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நான் என்னிடம், இந்த நாள் சிறந்த நாள் என்று தான் இந்த சூழலை கடந்து போகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

கேபிவசெர்டிப் மருந்து மூலம் பிரிட்டனில் ஆயிரக்கணக்கிலும், உலக அளவில் லட்சக்கணக்கிலும் பலன் பெற இருக்கும் பெண்களில் க்வெனும் ஒருவர்.

"நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் கணவரும், குழந்தைகளும், அவர்களின் துணைவர்களும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கிடைத்துள்ளனர். இந்த மருந்து மூலம் எனக்குக் கிடைத்த நன்மை என்னவென்றால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் என்னுடைய மகனின் திருமணத்தை என்னால் பார்க்க முடியும் என்பது தான்." என்று அவர் கூறுகிறார்.

BBC வெலின்ந்ரே புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் பிரிவு ஆலோசகராக பணியாற்றும் மருத்துவர் சிமோன் வாட்டர்ஸ் 2023-ம் ஆண்டு ஒப்புதல்

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உலக அளவில் பயன்படுத்த 2023-ஆம் ஆண்டே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், கேபிவசெர்டிப் மருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வெலின்ந்ரே புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் பிரிவு ஆலோசகராக பணியாற்றும் மருத்துவர் சிமோன் வாட்டர்ஸ், "சிறந்த வாய்ப்பினால் நாம் தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளோம்," என்று கூறினார்.

"நீண்ட காலமாக இதனை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். தற்போது நிலையான சிகிச்சையின் ஒரு அங்கமாக இந்த மருந்தை பயன்படுத்தலாம்," என்று அவர் தெரிவிக்கிறார்.

"இந்த சிகிச்சையை சில காலமாக, நோயாளிகளை உள்ளடக்கிய சிறு குழுக்களில் பயன்படுத்தி வருகின்றோம். சில பக்கவிளைவுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த மருந்து மிகவும் வீரியமானது என்று எடுத்துக் கொண்டாலும் கூட சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்"

"பொதுவான மார்பகப் புற்றுநோயை கொண்டுள்ள நோயாளிகளின் பெரிய குழுக்களுக்கும் இது பொருந்தும்" என்று அவர் கூறுகிறார்.

கேபிவசெர்டிப் எவ்வாறு செயல்படுகிறது?

ஹார்மோன் ரிசப்டர் பாசிடிவ் இரண்டாம் நிலை மார்பகப் புற்றுநோய் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்றாகும். இது ஈஸ்ட்ரோஜன் முன்னிலையில் ஏற்படுகிறது. இத்தகைய தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சில குறிப்பிடத்தக்க மரபணு மாற்றம் ஏற்படும். அவர்களுக்கு இந்த மருந்து ஏற்றதாக இருக்கும்.

ஹார்மோன் தெரபி பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இருப்பினும், புற்றுநோய், ஒரு கட்டத்திற்கு, அந்த சிகிச்சையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தக் கூடும்.

ஆய்வின் போது, ஒரு குறிப்பிட்ட வகையான புரதம் இந்த எதிர்ப்பு செயல்பாட்டை உடலில் உருவாக்குகிறது. ஆனால் ஹார்மோன் தெரபியுடன் கேபிவசெர்டிப் மருந்தை அளிக்கும் போது அந்த புரதத்தின் செயல்பாட்டை நடுநிலையாக்குகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Getty Images இம்மருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சில காலம் கூடுதலாக வாழும் வகையில் உண்மையான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகிறது வாழ்நாளை இரட்டிப்பாக்கும்

பேராசிரியர் ராப் ஜோன்ஸ் இது குறித்து கூறும் போது, "ஹார்மோன் தெரபியோடு சேர்த்து ப்ளேஸ்போ (Placebo) எடுத்துக் கொண்ட போது அவர்களின் உயிர் வாழும் சூழல் 20 மாதங்கள் ஆக இருந்தது. ஆனால் கேபிவசெர்டிப் மருந்தை ஹார்மோன் தெரபியோடு வழங்கும் போது அவர்களின் வாழ்நாள் 39 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது," என்றார்.

"வாழ்தலுக்கான சாத்தியக்கூறுகளை இது இரட்டிப்பாக்குகிறது என்பது மிகவும் முக்கியமானது. இது வெறும் புள்ளி விவரம் மட்டுமல்ல. இது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சில காலம் கூடுதலாக வாழும் வகையில் உண்மையான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகிறது," என்றும் அவர் கூறினார்.

வேல்ஸில் உள்ள ஹெல்த் அண்ட் கேர் ரிசர்ச் மையத்தின், ஆதரவு மற்றும் விநியோகப் பிரிவின் தேசிய இயக்குநரான மருத்துவர் நிகோலா வில்லியம்ஸ் கூறும் போது, "மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் என்பது மிகவும் வேதனைக்குரியது. பிரிட்டனில் பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இந்த புற்றுநோயை குணப்படுத்த இயலாது என்று கூறுவது இன்னும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கும்.

கேபிவசெர்டிப் மருந்து உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் உரிமம் பெற்றது தற்போது நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது. கேபிவசெர்டிப் மருந்தை ஹார்மோனல் தெரபியுடன் எடுத்துக் கொள்ளும் போது க்வென் போன்ற நோயாளிகள் தங்களின் வாழ்நாட்களை குறிப்பிடத்தக்க வகையில் நீட்டிக்க முடியும், வாழ்வின் தரமும் மேம்படும்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.