டொனால்ட் டிரம்பின் "ஒன், பிக், பியூட்டிஃபுல் பில் ஆக்ட்" என்ற மசோதாவில், அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்தில் இருந்து பில்லியன் கணக்கான தொகையை வரியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பிரிவு மறைந்துள்ளது.
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், ஹெச்-1 பி விசா போன்ற தற்காலிக விசா வைத்திருக்கும் பணியாளர்களுக்கும், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்தில் 3.5% வரி விதிக்க இந்தத் திட்டம் முன்மொழிகிறது.
அவ்வாறு உலக அளவில் இந்தியாவிற்கு தான் அதிகமான பணம் அனுப்பப்படுகிறது. எனவே, இந்தியாவுக்கு இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் அதிகளவில் பணம் பெறும் நாடுகளாக உள்ளன. 2023ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் 119 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இந்தியாவுக்கு அனுப்பினர்.
இது இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதி இழப்புகளில் பெரும் பகுதியை ஈடுகட்ட உதவியது மட்டுமின்றி, அந்நிய நேரடி முதலீட்டையும் மிஞ்சும் அளவுக்கு அதிகமாக இருந்தது என இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் தயாரித்த ஓர் அறிக்கை கூறுகிறது. இந்தத் தொகையில் அதிகபட்சமான பங்கு அமெரிக்காவில் இருந்து வந்தது.
இந்தப் பணம், உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்களால், தங்கள் பெற்றோர்களின் மருத்துவச் செலவுக்காகவும், உறவினர்களின் கல்விக் கட்டணத்திற்காகவும், சொந்த ஊரிலுள்ள வீட்டுக் கடனைச் செலுத்துவதற்காகவும் அனுப்பப்படும் பணம்.
அமெரிக்காவில் ஏற்கெனவே வரி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்களிடம், வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கு நேரடியாக வரி விதிப்பது, பில்லியன் கணக்கான தொகையைக் குறைக்கக்கூடும்.
இதனால் என்ன நடக்கலாம்?கண்டுபிடிக்க முடியாதபடி முறைசாரா பணப் பரிமாற்றங்கள் அதிகரிக்கலாம். இந்தியாவிற்கு நிலையாகக் கிடைக்கும் வெளிநாட்டு வருமான ஆதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
உலக வங்கியின் கணிப்புப்படி, 2008 முதல் வெளிநாடுகளில் இருந்து அதிக பணம் பெற்ற நாடாக இந்தியா இருக்கிறது. 2001இல் உலகளவில் அனுப்பப்பட்ட தொகையில் 11% இந்தியா பெற்றது. இது 2024இல் 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் எதிர்காலத்திலும் அதிகளவிலான பணத்தை தங்கள் நாட்டுக்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2029க்குள் இந்த பணப் பரிமாற்றம் 160 பில்லியன் டாலர் வரை எட்டும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2000 முதல், இவ்வாறு அனுப்பப்படும் பணத்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 3% பங்கு தொடர்ந்து உருவாகி வருகிறது என்று இந்தியாவின் மத்திய வங்கி கூறுகிறது.
கடந்த 1990இல் 6.6 மில்லியனாக இருந்த இந்தியாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 2024க்குள் 18.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் உலகளாவிய பங்கு 4.3% இலிருந்து 6% க்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வளைகுடா நாடுகளில் வாழ்கிறார்கள். இருந்தாலும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாக, அமெரிக்கா போன்ற மேம்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு, திறமையான மக்கள் அதிகளவில் செல்லத் தொடங்கியுள்ளனர்.
உலகளவில், அதிகமாகப் பணம் அனுப்பும் நாடாக அமெரிக்கா முன்னணியில் உள்ளது. 2020–21இல் 23.4% ஆக இருந்த அதன் பங்கு, 2023–24இல் 28% ஆக உயர்ந்தது. இதற்குக் காரணம், கொரோனாவுக்குப் பிறகு வேலை வாய்ப்புகள் வேகமாக வளர்ந்ததும், பிற நாடுகளில் பிறந்து அங்கு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 6.3% அதிகரித்துள்ளதும் ஆகும்.
குறிப்பிடத்தக்கவாறு, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 78% பேர் மேலாண்மை, வணிகம், அறிவியல் மற்றும் கலைகள் போன்ற அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
பணம் அனுப்பும் கட்டணங்கள், குறிப்பாக சேவைக் கட்டணங்கள் மற்றும் நாணய மாற்றத்தால் ஏற்படும் செலவுகள், குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் உலகளாவிய அளவில் நீண்ட காலமாக கவலைக்குரிய விஷயமாக இருக்கின்றன.
உலகளாவிய சராசரி கட்டணங்கள் இலக்குகளைவிட அதிகமாக இருந்தாலும், டிஜிட்டல் வழிகள் அதிகரித்து சந்தைப் போட்டி கூடுவதால், இந்தியா பணம் அனுப்புவதற்கு மிகவும் மலிவான இடங்களில் ஒன்றாக உள்ளது.
டெல்லியை சேர்ந்த குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (ஜிடிஆர்ஐ) என்ற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த அஜய் ஸ்ரீவஸ்தவா, பணம் அனுப்புவதில் 10-15% வீழ்ச்சி ஏற்பட்டால், இந்தியாவுக்கு ஆண்டுக்கு 12-18 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்.
இது டாலர் விநியோகத்தை குறைத்து, ரூபாயின் மதிப்பில் அழுத்தம் உண்டாக்கும். இதனால், நாணயத்தை நிலைநிறுத்த மத்திய வங்கி அடிக்கடி தலையிட வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் கருதுகிறார்.
கேரளா, உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் மீது இந்த வரி விதிப்பு நடவடிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் பணம் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம், வீடு போன்ற அடிப்படை தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார நிலைமை குழப்பத்துடன் இருக்க, இந்தியாவும் பணவீக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த வரி "குடும்பச் செலவுகளைக் கடுமையாக பாதிக்கக்கூடும்" என ஸ்ரீவஸ்தவா எச்சரிக்கிறார்.
பணம் அனுப்புவதற்காக விதிக்கப்படும் வரி, இந்திய குடும்பங்களின் செலவுத் திட்டங்களைச் சுருக்கி, நுகர்வையும் முதலீட்டையும் குறைக்கும் என்று டெல்லியில் உள்ள உலக வர்த்தக மையத்தின் ஆய்வுகள் மையம் எச்சரிக்கின்றன.
இதனால், இந்தியாவின் நிலையான அந்நியச் செலாவணி ஆதாரங்களில் முக்கியமான ஒன்று பாதிக்கப்படும். இந்தியாவில் அதிக அளவில் பணம் பெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம், பெரும்பாலும் குடும்பத்திற்காகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வீடு வாங்குவது மற்றும் தங்கத்தில் சேமிப்பதற்கும், சிறு வணிகங்கள் போன்ற சொத்துகளில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்று சிந்தனைக் குழுவின் பிரீதம் பானர்ஜி, சப்தர்ஷீ மண்டல், திவ்யான்ஷ் துவா ஆகியோரின் கொள்கை விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் அனுப்பப்படும் பணத்தின் வரவு குறைந்தால், உள்நாட்டு சேமிப்பு சுருங்கி, நிதி மற்றும் உடைமைகள் போன்ற சொத்துகளில் முதலீடு குறையக்கூடும்.
அதேபோல குடும்பங்களிலும், "சேமிப்பு மற்றும் முதலீட்டைவிட உணவு, சுகாதாரம், கல்வி போன்ற நுகர்வுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள சென்டர் ஃபார் குளோபல் டெவலப்மென்ட் (Center for Global Development) என்ற சிந்தனைக் குழு நடத்திய ஓர் ஆய்வில், புதிய வரித் திட்டம் அமலுக்கு வந்தால், முறையாகப் பண அனுப்பும் வழிமுறை (formal remittances) பெரிதும் குறையும் என்ற எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
மெக்சிகோ ஆண்டுக்கு 2.6 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது. இதேபோல், இந்தியா, சீனா, வியட்நாம், குவாத்தமாலா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார் போன்ற பல லத்தீன் அமெரிக்க நாடுகளும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
இந்த வரியைச் சுற்றி இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. இது முழுமையாக அமல்படுத்தப்படுவதற்கு செனட் ஒப்புதல் மற்றும் அமெரிக்க அதிபரின் கையொப்பம் தேவைப்படுகிறது.
"இந்த வரி குடிமக்கள் அல்லாத அனைத்து மக்களுக்கும், தூதரக மற்றும் ஐ.நா/உலக வங்கி ஊழியர்களுக்கும்கூட பொருந்தும். ஆனால் வரி செலுத்தும் நபர்கள் வரிச் சலுகையைக் கோரலாம். எனவே, பணம் அனுப்புவதற்கு விதிக்கப்படவுள்ள இந்த வரி, பெரும்பாலும் வரி செலுத்தாத புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமே விதிக்கப்படும்.
அவர்களில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத புலம்பெயர் மக்களும் (மற்றும் ராஜ்ஜீய அதிகாரிகளும்) அடங்குவர்" என்று உலக வங்கியின் இடப்பெயர்வு மற்றும் பணம் அனுப்புதலுக்கான உலக வங்கியின் முன்னணிப் பொருளாதார நிபுணர் திலீப் ரதா பிபிசியிடம் தெரிவித்தார்.
முனைவர் ரதா தனது லிங்க்ட்இன் பதிவில், "பணத்தை அனுப்புவதற்கு ஆகும் செலவைக் குறைக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் முறைசாரா வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம்" என்று கூறுகிறார்.
உதாரணமாக, அவர்கள் பணத்தைக் கையில் எடுத்துச் செல்லலாம் அல்லது நண்பர்கள், கூரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் அல்லது விமான ஊழியர்கள் மூலம் அனுப்பலாம், அமெரிக்காவில் உள்ள நண்பர்களின் உதவியுடன் உள்ளூர் நாணயமாகக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் அல்லது ஹவாலா, ஹுண்டி, கிரிப்டோகரன்சி போன்ற வழிகளையும் பயன்படுத்தலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.
"முன்மொழியப்பட்ட இந்த வரி அமெரிக்காவுக்குள் அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தைத் தடுக்குமா? அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் தங்கள் வீட்டுக்குத் திரும்பும் நிலையை உருவாக்குமா?" என்று ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பும் முனைவர் ரதா, அது அவ்வளவு எளிதாக நடக்காது என்று கூறுகிறார்.
அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் தரும் வேலை ஆண்டுக்கு 24,000 டாலருக்கும் மேல் வருமானம் தருகிறது. இது பல வளரும் நாடுகளில் கிடைக்கும் ஊதியத்தைவிட 4 மடங்கு முதல் 30 மடங்கு வரை அதிகம். புலம்பெயர்ந்தோர் பொதுவாக ஆண்டுக்கு 1,800 டாலர் முதல் 48,000 டாலர் வரை வீட்டிற்குப் பணம் அனுப்புகின்றனர் என்று முனைவர் ரதா மதிப்பிடுகிறார்.
மேலும், "3.5% வரி இருந்தாலும், புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புவதை நிறுத்த மாட்டார்கள். ஏனென்றால், கடல், ஆறு, மலை எல்லாம் கடந்து செல்லும் அவர்களின் முக்கிய நோக்கம் ஆதரவற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக வீட்டிற்குப் பணம் அனுப்புவதுதான்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு