சமூகவலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண், வேகமாக செல்லும் ரயிலின் கதவில் தொங்கி ஊஞ்சலாடுகிறார்.
அந்த பெண் ரயிலின் வெளிப்புற கதவிலேயே தொங்கி கொண்டிருந்ததால், மிகப்பெரிய விபத்தாக முடிய வாய்ப்பு இருந்தது. இச்செயல் பயணிகள் பலருக்கு கோபத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் மட்டுமல்லாது, பின்னால் சில ஆண்களும் இதேபோன்ற ஆபத்தான சாகசங்களை செய்கின்றனர். இதனால், இது ஒரு குழுவாக திட்டமிட்டு எடுத்த வீடியோவாக இருக்கலாம் என நெட்டிசன்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சேலையின் பல்லு காற்றில் பறப்பதும், அந்த பெண் ஊஞ்சலில் ஆடுவது போல் தோன்றுவதும், இதை ஒரு திரைப்படக் காட்சியாகவே பலரை உணர வைத்தது. உண்மையில் இது மரணத்துடன் விளையாடும் ஒரு செயல் .இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள், “வீடுகளுக்கு திரும்பி வரும் உறவுகளை இழக்க வேண்டாம்”, “இவையெல்லாம் முடிவில் ஒரு சோகச் செய்தியாகவே முடியக்கூடும்” என பதிவிட்டு வருகின்றனர். ரயில்வே அதிகாரிகள் உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.