ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?
Vikatan June 08, 2025 01:48 AM

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக்குக் கடத்துவதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயினை தங்கச்சிமடம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் பிடிபட்ட கடத்தல் பீடி இலைகள்

இதனைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதியிலிருந்து இலங்கை மன்னார் மாவட்டம் நடுக்குடா கடற்கரைக்கு நேற்று கடத்திச் செல்லப்பட்ட 1250 கிலோ பீடி இலைகள் அங்குச் சிக்கின.

இது தொடர்பாக கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்த இலங்கை சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்குக் கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துறைமுகம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடற்கரைப் பகுதியில் உள்ள எம்.ஆர்.டி மீன் கம்பெனி அருகில் சந்தேகப்படும் நிலையில் கார் ஒன்று நின்றுள்ளது. அந்த காரை போலீஸார் சோதனையிட்ட போது, காரினுள் கஞ்சா பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கார்

காரில் இருந்த 70 கிலோ கஞ்சாவைக் கைபற்றிய போலீஸார், இது தொடர்பாக தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த சகாயராஜ், அர்த்தினாஸ், ராமச்சந்திரன், குலோத்தமன், சந்தோஷ், சச்சின் ஆகிய 6 பேரைக் கைது செய்து  காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இலங்கைக்குக் கடத்த முயன்ற கஞ்சா குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.