தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம் தாங்கள் வந்த காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வரலாம் என அழைத்து சென்றுள்ளனர். அப்போது சங்கரி மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளார். அதனை குடித்த மூதாட்டி சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்தார்.
மூதாட்டி மயக்கிய பிறகு அவர் அணிந்திருந்த தங்கச்செயின் மற்றும் பணத்தை தம்பதியினர் திருடி விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து மயக்கம் தெளிந்து கண் விழித்த மூதாட்டி தங்கச்செயின் மற்றும் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மூதாட்டி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாசுதேவன்- சங்கரி இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நீதிபதி குற்றவாளியான வாசுதேவன் – சங்கரி தம்பதியினருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.