மார்ச் 2026க்குள் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதை மத்திய அரசு முற்றிலும் பொய்யானது என திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த தகவல் குறித்து *பத்திரிகை தகவல் பணியகம் (PIB)* பதிலளித்து, “மக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.
‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோவில், ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த வீடியோ 4.5 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், PIB உண்மைச் சோதனை துறை அந்த தகவல் தவறானது என உறுதி செய்தது.
இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.500 நோட்டுகளைப் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், அவை தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில், ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தவறாக புரிந்து, வதந்தி உருவானதாக கருதப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும், போலியான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.