மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வருபவர் சிவான்ஷ் குப்தா. 22 வயதான முதலாமாண்டு மாணவரான சிவான்ஷ் குப்தா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த, குர்கானில் வசிக்கும் புகழ்பெற்ற மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரும், 2 சகோதரிகளும் மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் சின்ன வயதில் இருந்தே மருத்துவம் தான் தனது இலக்கு என வைத்திருந்தார். கல்லூரியில் அமைதியாகவும், மற்ற மாணவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கினார்.
இந்நிலையில் தற்கொலைக்கு முன், சிவான்ஷ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு “மன்னிக்கவும், நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்னை போல யாரும் செய்ய வேண்டாம்” என உணர்ச்சிபூர்வமான செய்தியை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த செய்தியைப் பார்த்ததும் அவரது நண்பர்கள் அவசரமாக விடுதிக்கு ஓடினர். அவர் விடுதியின் மாடிமீது தற்கொலை செய்ய தயாராக நின்றிருந்தார். இதனைக் கண்டதும் நண்பர்கள் ஓடி காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் கீழே குதித்துவிட்டார். அங்கு நின்ற மாணவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக சிவான்ஷ் மனச்சோர்வுடன் இருந்ததாகவும், பாடங்களின் அழுத்தம், தனிமை போன்ற காரணங்கள் இருக்கலாம் என கல்லூரி நிர்வாகம் சந்தேகம் தெரிவித்துள்ளது. அந்த விடுதியில் முதலாமாண்டு மாணவர்களே அதிகமாக இருப்பதால் ராகிங் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை என டீன் டாக்டர் நவ்நீத் சக்சேனா கூறினார். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்த விசாரணைக்காக உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அவரது பெற்றோர் குர்கானிலிருந்து ஜபல்பூருக்கு புறப்பட்டு சென்றனர். அவரது மொபைல் போனை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே முழு உண்மையும் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.