சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து வெளியான படம் தக் லைஃப். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வந்த படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். இவரது கேமரா கைவண்ணத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் கமலின் மருதநாயகம் படத்தில் இருந்தே பணியாற்றி வருகிறார்.
மருதநாயகம் படத்தில் நான் பணியாற்ற பல நிபந்தனைகளை விதித்தேன் என்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் என்ன சொல்கிறார்னு பாருங்க.
தேவர்மகன் படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். அந்தப் படத்தின் இந்திப்பதிப்பு விராசத். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நான் பணியாற்றினேன். அந்தப் படத்துக்கு 12 விருதுகள் கிடைத்தன. அதைப் பார்த்த கமல் சார் மருதநாயகம் படத்துக்குப் பணியாற்ற அழைத்தார். அவரது ரசிகர் நான். அப்போ தான் முதன்முறையாக கமல் சாரைப் பார்க்கிறேன்.
நான் முதல்லயே என்னோட கண்டிஷனை சொல்லி விட்டேன். ஏதாவது வேலை இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க. நான் மும்பைல இருப்பேன். திடீர்னு கிளம்பி வர முடியாதுன்னு சொல்லிட்டேன். மெய்ல அனுப்புங்க. இல்லன்னா முன்னாடியே டீம்ல யாராவது சொல்லிடுங்கன்னு சொன்னேன்.
ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னால் தான் அதுக்கேற்ற ஐடியா கிடைக்கும். அதே மாதிரி எனக்கு மாதச்சம்பளம் வேணும். நீங்க படம் எவ்ளோ நாள்னாலும் எடுப்பீங்க. அதுவரை நான் சும்மா உட்கார்ந்துருக்க முடியாது. 14 மாசமாச்சு. சூட்டிங் ஆரம்பிச்சி. ஆனாலும் அத்தனை மாசமும் சம்பளம் கொடுத்தாங்க.
அதை நான் முதல்லயே சொல்லிட்டேன். நான் என் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் சிரமத்தைக் கொடுத்துடக்கூடாதுன்னு முதல்லயே சொல்லிருந்தேன். கமல் சார் ஜோக்கா ஒரு தடவை சொன்னாரு. அந்தக்காலத்திலேயே இவரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே 25 லட்ச ரூபாய் வாங்கிட்டாருன்னு சொன்னாரு. நான் அப்படி அக்ரிமென்ட் போட்டுட்டேன். ரொம்ப பிளான் பண்ணி ரெடியா இருந்தோம். அந்தப் படம் வந்துருந்தா வேற லெவல்ல போயிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.