செர்பியாவில் வசித்து வரும் மாடல் அழகி 19 வயது மாடல் டிஜானா ராடோன்ஜிக், மாண்டெனேகுரோவில் நடைபெற்ற ஒரு பாராசெயிலிங் விளம்பர படப்பிடிப்பில் தனது பாதுகாப்பு உபகரணங்களை நீக்கிவிட்டு , 150 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சுற்றுலா பருவத்திற்கு முன் மக்களை கவர்வதற்காக நடத்தப்பட்ட இந்த படப்பிடிப்பில், டிஜானா பாராசெயிலிங் செய்கிற காட்சிகளில் கலந்து கொண்டார். இந்தப் பணிக்காக முன்னதாகவே தேர்வு செய்யப்பட்ட டிஜானாவுக்கு பாராசெயிலிங் குறித்த அனுபவம் எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பில் அவர் பறக்கத் தொடங்கியதும், திடீரென பதட்டமடைந்த டிஜானா “என்னை கீழே போட்டு விடு” என அலறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவர் தனது லைஃப் ஜாக்கெட்டும் பாதுகாப்பு கயிறும் வெறித்தனமாக இழுத்து விட்டார். இதையடுத்து, காற்றில் கட்டுப்பாடின்றி வீழ்ந்தார். கடலில் இருந்து உடல் மீட்கப்பட்டதும், மருத்துவர்கள் விழுந்த போது தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், பலரும் அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் மிர்கோ க்ர்ட்ஜிக், “எனக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை, ஆனால் இது எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி,” என கூறியுள்ளார். டிஜானாவின் குடும்பத்தினர் இந்த மரணத்துக்கான காரணங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.