இந்த புத்தகம் ஜப்பானில் மட்டும் சிறிதளவு பிரபலமடைந்தது. ஆனால் கணிப்புகள் ஒவ்வொன்றும் நடக்கத் தொடங்கியதும் கவனம் அதிகரித்தது. ஜப்பானை தாண்டி சர்வதேச அளவில் ரையோ தத்சுகி பேசுபொருளானார். இவரது கணிப்புகளை கண்டு மக்கள் அச்சமடைய தொடங்கினர். உதாரணமாக 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள டோஹோகு பிராந்தியத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று கணித்திருந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதுமட்டுமின்றி ஃபுகுஷிமா அணு உலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் வரும் ஜூலை 2025 மாதம் பேரழிவு ஒன்று ஏற்படப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகள் ஏற்படும். இதன் விளைவாக சுனாமி ஏற்படும். அதுவும் 2011ஆம் ஆண்டு டோஹோகு பேரழிவை காட்டிலும் மூன்று மடங்கு பெரிய சுனாமி ஏற்படும். இத்தகைய இயற்கை பேரிடர் மூலம் மிகப்பெரிய சேதங்கள் உண்டாகும். பல லட்சம் பேர் இடம்பெயர நேரிடும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மனித சமூகம் பாதிப்பை சந்திக்கும். எனவே கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது. அவசரகால முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது ஜப்பான் கடல்பகுதி கொதிப்பது போல ஒரு கற்பனையாக புகைப்படத்தை நவீன பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி பகிர்ந்திருக்கிறார். இதனை கடலுக்கு அடியில் இருந்து எரிமலையின் சீற்றம் என்றும், மிகப்பெரிய நிலநடுக்கத்தின் விளைவு என்றும் சிலர் விளக்கம் கொடுத்துள்ளனர். ஜூலை 2025ல் நிகழவிருக்கும் பேரழிவு என்பது பார்ப்பதற்கு வைரத்தின் வடிவில் இணைக்கப்படும் ஜப்பான், இந்தோனேஷியா, தைவான், வடக்கு மாரியானா தீவுகள் ஆகியவற்றில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்பிக்க அரசுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய பாபா வங்கா ரையோ தத்சுகியின் கணிப்பால் வரும் ஜுலை மாதம் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்களது பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு நாடுகளில் இருந்து ஜப்பான் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. ஜூலை மாதம் நெருங்க நெருங்க பயணங்கள் அதிக அளவில் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியாவில் உள்ள சீனா தூதரகத்தில் இருந்து கூட முக்கிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ஜப்பானில் உள்ள சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஜப்பான் நாட்டின் புவியியல் ஆய்வு மையம் (JMA) ஏதேனும் எச்சரிக்கை விட்டிருக்கிறதா? என்று பார்த்தால் இதுவரை அப்படி எதுவும் இல்லை. அதேசமயம் #July2025Prediction என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.