உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் மாநில வேளாண் அமைச்சர் பி. பிரசாத் ஆகியோர் இணைந்து ராஜ்பவனில் சுற்றுச்சூழல் தின விழாவைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.
ராஜ்பவன் செண்ட்ரல் ஹாலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா மேடையில் கையில் காவிக்கொடி ஏந்தியிருக்கும் பாரதமாதா போட்டோ ஒன்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பாரதமாதா கையில் காவிக்கொடியுடன் காட்சியளிக்கும் அந்தப் படம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாகவும், அந்தப் படத்தை அகற்ற வேண்டும் எனவும் அமைச்சர் பிரசாத் ஆளுநர் மாளிகைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தப் பாரதமாதா படம் ஆளுநர் மாளிகையின் மைய மண்டபத்தில் இதற்கு முன்பும் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதை மற்ற இயலாது எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமைச்சர் பிரசாத் ஆளுநர் மாளிகையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தலைமையில் ராஜ்பனில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேசுகையில், "பாரதமாதா படத்தை மாற்ற முடியாது எனக் கூறியதால் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
இது எந்த மாதிரியான சிந்தனை? பாரதமாதா நம் தேசத்தின் அடையாளம். அந்தப் படத்தை மாற்ற முடியது" என்றார்.
இதற்கிடையே கேரள வேளாண் அமைச்சர் பிரசாத் தலைமைச் செயலகத்தில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து சுற்றுச்சூழல் தின விழாவை நடத்தி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இதுபற்றி அமைச்சர் பிரசாந்த் கூறுகையில், "அரசு நிகழ்ச்சியில் செய்யக்கூடாத மாற்றத்தை ஆளுநர் மாளிகையில் செய்திருந்தார்கள். அது அரசால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இதையடுத்து தலைமைச் செயலக வளாகத்தில் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியை நடத்தினோம். சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பாரதமாதா படம் அங்கு வைக்கப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தும் படம் அது. அரசியல் அமைப்பின்படி இது சரியான செயல் அல்ல. அந்தப் படத்தை மாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள்விடுத்தேன். ஆளுநர் மாளிகை மறுத்துவிட்டது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
பொதுவான நிகழ்ச்சியில் மத மற்றும் அரசியல் சின்னங்களைப் பயன்படுத்தக்கூடாது. அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்ற வேண்டியவர் ஆளுநர், ராஜ்பவன் கட்சி அரசியலுக்கான இடமாக இருக்கக்கூடாது" என்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும் நட்பு பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரத மாதா படம் வைக்கப்பட்ட விவகாரத்தால் விவாதம் எழுந்துள்ளது.
இதுபற்றி சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான, தவறான செயல்பாடு. ஆளுநரைப் பயன்படுத்திக் காவி மயமாக்கும் அஜண்டாவை ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்துகிறது" என்றார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "ராஜ்பவனில் குருமூர்த்தியை அழைத்து ஆபரேஷன் சிந்தூர் நிகழ்ச்சியை நடத்தியபோதே பாரதமாதா படத்தை வைத்திருந்தனர்.
அப்போது நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், முதல்வர் பினராயி விஜயன் கொஞ்சம்கூட வாய் திறந்து பேசவில்லை. ராஜ்பவனை ஆர்.எஸ்.எஸ் தலைமையகமாக மாற்றக்கூடாது" என்றார்.
கேரள கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா படம்பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரளிதரன் கூறுகையில், "பாரத மாதா படத்தின் முன்பு விளக்கேற்றமாட்டோம், பாகிஸ்தான் கொடியின் முன்பு விளக்கேற்றுவோம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள். பாரதமாதா படத்தில் என்ன பிரச்னை இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.
"சுதந்திரப் போராட்டத்தின்போது பாரத் மாதாகி ஜெய் எனக் கோஷமிட்டதால்தான் மக்களுக்கு நாட்டுப்பற்றும், நாட்டின் மீது அன்பும் ஏற்பட்டது" என பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
பாரதமாதா படம் குறித்த அரசியல் ரீதியான விவாதம் கேரளாவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...