பக்ரீத் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முகூர்த்த நாட்களாக இருப்பதாலும், ஜூன் 7 சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 6 வெள்ளிக்கிழமை 520 பேருந்துகளும், ஜூன் 7 சனிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூன் 6ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், ஜூன் 7 ம் தேதி சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாதாவரத்திலிருந்து ஜூன் 6 மற்றும் 7 தேதிகளில் தலா 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 14,413 பயணிகளும், சனிக்கிழமை அன்று 5,990 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 15,680 பயணிகளும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதிகளை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.