மத்தியப் பிரதேச மாநிலத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வரைதல் மற்றும் வழங்கல் (DDO - அரசு ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் நிர்வகிப்பவர்) அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தின்படி, 50,000 ஊழியர்கள் அம்மாநிலத்தின் அரசுப் பணிக்குழுவின் 9 சதவிகிதமாகும். அரசு ஆவணங்களில் பெயர், பணியாளர் குறியீடு கூட இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியம் வழங்கப்படவில்லை என்று கடிதம் கூறுகிறது. இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ. 230 கோடி முறைகேடு நடப்பதை, அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? எனவும் கேள்வி எழுந்துள்ளது. இந்த ரூ. 230 கோடி மோசடி விவகாரம் குறித்து, 15 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி மே 23 ம் தேதியில், சுமார் 6,000 அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது. உண்மையான அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாததால்தான், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.