கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் புறவழிச் சாலையில் இன்று மாலை தருமபுரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது எதிரே வந்த எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரியானது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க பத்திற்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிப்பர் லாரி ஓட்டுநரான சிவம்பட்டியை சேர்ந்த குமார் (32), தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பரமசிவம் (56) ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டனர். மேலும் காயமடைந்த சுமார் 20 நபர்களுக்கு மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.