மணல் கடத்திய 3 பேர் கைது... லாரி பறிமுதல்!
Dinamaalai June 07, 2025 09:48 AM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மினிலாரியில் ஓடை மணலை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மணலுடன் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் எந்தவித அனுமதியும் இன்றி ஓடை மணல் வாகனங்களில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். 

அப்போது நீதிமன்றம் அருகில் வேகமாக வந்த மினிலாரியை போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மினிலாரியில் ஒரு யூனிட் ஓடை மணல் இருப்பது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் எந்தவித அனுமதியின்றி மணலை அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மினிலாரியில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

இதில், மினி லாரி ஓட்டுனர் சாத்தான்குளம் ஆர்.சி. வடக்குத்தெருவை சேர்ந்த தர்மராஜ் (38), உதவியாளர்கள் கிருஷ்ணன் கோவில் தெரு இசக்கிமுத்து (26), பண்டாரபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபாண்டி (45) ஆகியோர் என தெரிய வந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட மணலுடன் மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.