திருவள்ளூர் அருகே அனுமதியின்றி தோண்டிய தனிக்கிணற்றில் தவறி விழுந்த மகனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய தந்தை, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுகூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (61 வயது), தனது மகன் சந்தோஷ்குமாருடன் சேர்ந்து வீட்டு பின்புறத்தில் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டி இருந்தார்.
மின் மோட்டார் மூலம் நீர் எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று மாலை தண்ணீர் வராததை சரிபார்க்க சென்ற சந்தோஷ் கிணற்றில் தவறி விழுந்தார்.
தந்தை ஜோதி உடனே கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால் கிணற்றில் விஷவாயு காரணமாக அவர் சுவாசம் முடங்கி உயிரிழந்தார். மகனை காப்பாற்றுவதில் அவரது போராட்டம் வீணாகியது.
சத்தம் கேட்டு தாய் புவனேஸ்வரி அருகிலுள்ள இளைஞர்களிடம் உதவி கேட்டார். பாலாஜி என்ற இளைஞர் கயிறு உதவியுடன் சந்தோஷை மயக்க நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர், தீயணைப்பு மற்றும் காவல்துறை ஜோதியின் உடலை மீட்டது. சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அதிகாரிகளின் விசாரணையில் கிராமத்தில் நீர் தட்டுப்பாடு நீடித்து வருவதாகவும், அனுமதியின்றி கிணறு தோண்டப்பட்டதும் அதிகாரிகளுக்கு பின்னரே தெரிய வந்ததாகவும் தகவல்.