சமூக வலைதளங்களில் போலீசார் சீருடையுடன் புகைப்படம் வெளியிட தடை... டிஜிபி உத்தரவு!
Dinamaalai June 08, 2025 02:48 AM

சமூக வலைதளங்களில் காவல்துறை அதிகாரிகள் தங்களது சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், முக்கியமான காவல்துறை பணிகள் தொடர்பாக சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை தங்களது தனிப்பட்ட சமூகவலைதள பக்கங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் சீருடையுடன் கலந்து கொள்வதாகவும் அப்போது பரபரப்பான அதிகாரபூர்வ தகவலை தெரிவிப்பதாகவும், காவல்துறை தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. யூடியூப் நேர்காணலின்போது போலீஸ் அதிகாரிகள் வழக்குகள் பற்றிய ரகசிய தகவல்களை எக்காரணத்தை கொண்டும் பகிரவேண்டாம்.

அகில இந்திய பணிகளின் நடத்தை விதிகளின்படி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் சேனலில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெறவேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய அனைத்து தகவல்களையும் தங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய அனுமதி பெறவேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றுதான் பேட்டி அளிக்க வேண்டும். இதுபோன்ற நன்நடத்தை விதிகளை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாக மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.