இந்நிலையில், வெற்றிக் கோப்பை உடன் ஆர்சிபி அணி புதன்கிழமை விதான் சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு திறந்தவெளி பேருந்தில் உலா வரும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதே நேரத்தில், கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐபிஎல் கோப்பை வென்ற ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த ஆர்சிபி வீரர்கள், மாலை சுமார் 4 மணி அளவில் விதான் சவுதா வந்தடைந்தனர். அங்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆர்சிபி வீரர்களுக்கு மரியாதை செய்தனர். அதை காண விதான் சவுதாவின் வளாகத்தை ஒட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அந்த இடமே மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. பலர் வளாகத்தின் வேலிகளை தாண்டி வரவும் முயற்சித்தனர். இந்த நிகழ்வின்போது மழை பொழிவு இருந்தது.
தொடர்ந்து அங்கிருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று அங்கு ரசிகர்களுடன் இணைந்து ஆர்சிபி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்தனர். இந்த நிலையில், ஆர்சிபி அணியின் சாம்பியன்களை பார்க்க ஆர்சிபி அபிமானிகள் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்த காரணத்தால் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என தகவல் கிடைத்துள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பல்வேறு நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் திரண்டு இருந்தனர். தொடர்ந்து மைதான கதவுகள் திறக்கப்பட்ட உடன் ஒரே நேரத்தில் அனைவரும் அதன் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய சிலர் மூச்சுத்திணறல், மயக்கம் அடைந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் மற்றும் ரசிகர்கள் உதவினார். பவுரிங் மருத்துவமனை, வைதேகி மருத்துவமனை மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறும்போது, “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழாவை இன்று ஏற்பாடு செய்தது. இது இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே 35,000 பார்வையாளர்களுக்கு மட்டும்தான் பார்வையாளர் மாடத்தில் இடம் உள்ளது. ஆனால், அங்கு சுமார் 2 முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் வந்திருந்தனர்.
விதான் சவுதாவுக்கு எதிரே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். ஆனால், அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதை அரசு, கிரிக்கெட் சங்கம் மற்றும் மக்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அறிவித்த இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.