தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிகளை முடுக்கி விடுகிற வகையில் இன்று (ஜூன் 7 ) தென் மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
இந்த நிலையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரைக்கு இன்று இரவு 10.30 மணியளவில் வந்து சேர்ந்தார். அமித்ஷாவை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சிந்தாமணி மண்டேலா நகர் ரிங் ரோட்டில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்றார்.
அமித்ஷா இன்று காலை 11 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு 11.45 மணியளவில் கிராண்ட் மதுரை ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெறும் பாஜக மாநில மையக் குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கிய தலைவர்கள் உள்ளதுதான் இந்த மையக் குழு. கூட்டணி, தேர்தல் வியூகம் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனை முடித்துக்கொண்டு மதிய உணவு அருந்துகிறார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.இந்த கூட்டங்களில் தென் மாவட்டங்களில் பாஜவை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு அமித்ஷா முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் நாளை 5,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மோப்ப நாய் உதவியுடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அமித்ஷாவை வரவேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “அமித்ஷா வருகை குறித்து திமுகவினர் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை. ஏன் கலக்கம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.
அண்மையில் திமுக பொதுக் குழு மதுரையில் நடைபெற்ற நிலையில், அமித்ஷாவின் வருகை கவனிக்கத்தகுந்ததாக மாறியுள்ளது.