மீன் முள்ளை விழுங்குவது ஆபத்தா? தொண்டை அல்லது வயிற்றுக்குள் சிக்கினால் என்ன ஆகும்?
BBC Tamil June 08, 2025 01:48 PM
Getty Images மீன் உணவு

மாமிச உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அலாதி ஆசை உண்டு. அதில் கடல் மீன் மற்றும் நல்ல தண்ணீர் மீன் எனப் பல வகைகள் உள்ளன.

சமீப காலங்களாகப் பலரும் ஆடு மற்றும் கோழியை விட மீனில் கொழுப்பு குறைவாக இருக்கிறது எனக் கூறி மீனை அதிகமாக உண்ணத் தொடங்கியுள்ளனர். ஆனால் பிரச்னை என்பது மீன் முட்களில் தான் உள்ளது.

மீன் சாப்பிட எவ்வளவு தான் ஆசை இருந்தாலும், அதில் முட்கள் இருக்கும் என்கிற அச்சத்தால் தான் பலரும் மீன்களைச் சாப்பிட இருமுறை யோசிக்கின்றனர்.

சாப்பிடுகிறபோது ஒரு சிறிய மீன் முள் தொண்டை வழியாக வயிற்றுக்குச் சென்றால் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அந்த சிறிய முள் தொண்டையில் சிக்கிக் கொண்டாலோ அல்லது ஒரு பெரிய முள் வயிற்றுக்குள் சென்றாலோ அது சிக்கலில் முடியக்கூடும்.

சிகிச்சை உண்டா? Getty Images மீன் சாப்பிட எவ்வளவு தான் அவா இருந்தாலும், அதில் முட்கள் இருக்கும் என்கிற அச்சத்தால் தான் பலரும் மீன்களைச் சாப்பிட இருமுறை யோசிக்கின்றனர்

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிக்காவோலுவைச் சேர்ந்த 54 வயதான ஜம்பா மங்கம்மா சமீபத்தில் மீன் குழம்பு சாப்பிட்டுள்ளார். அதில் மீன் முள் ஒன்று இதயத்திற்கு அருகே உணவுக் குழாயில் சிக்கியது.

அதிக வலி ஏற்பட்டதால் காக்கிநாடாவில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அங்கே பல பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள் மீன் முள், அவரது இதயத்திற்கு அருகே சிக்கியுள்ளதைக் கண்டுபிடித்தனர்.

அவரது மார்பு எலும்புகளைப் பாதிக்காதவாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் இதயம் அருகே சிக்கியிருந்த மீன் முள்ளை ட்ராவேர் என்கிற செயல்முறையைப் பயன்படுத்தி நீக்கியதாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் சிவராமகிருஷ்ணா, நாகேஸ்வர ராவ், வம்சி சைதன்யா ஆகியோர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

மேலும் ஒரு மீன் முள் சம்பவம் Getty Images சிலருக்கு தொண்டை மற்றும் வயிறு பகுதிகளில் மீன் முள் குத்தி பாதிப்பு ஏற்படும் சம்பவங்களைப் பார்த்து வருகிறோம்

இதே போன்ற சம்பவம் மேடக் மாவட்டத்திலும் நடந்தேறியது. அம்மாவட்டத்தில் உள்ள டெக்மாலைச் சேர்ந்த சைலு என்கிற இளைஞர் மீன் குழம்பு உண்கிற போது முள்ளை விழுங்கிவிட்டார். அந்த முள் செரிமானம் ஆகிவிடும் என அவர் நினைத்திருந்தார், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

அந்த முள் பல நாட்களாக அவரை உறுத்திக் கொண்டே இருந்துள்ளது. எனவே மேடக்கில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அவரின் வயிற்றில் இருந்து மீன் முள்ளை மருத்துவர்கள் அகற்றினர்.

நாம் அவ்வப்போது பலரும் இது போன்று தொண்டை மற்றும் வயிறு பகுதிகளில் மீன் முள் குத்தி பாதிக்கப்படும் சம்பவங்களைப் பார்த்து வருகிறோம். இத்தகைய சூழலில் தொண்டையில் மீன் முள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு சாப்பிட வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகின்றன.

அவ்வாறு தவறுதலாக மீன் முள் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விஜயவாடா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் கல்யாணி பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

"மீன் சாப்பிடுவதற்கு முன் முட்களை முழுவதுமாக எடுத்துவிடுவது நல்லது. மருத்துவர்களாக நாங்களும் இதைத்தான் பரிந்துரைக்கிறோம். மீன் முள் தொண்டையில் சிக்கினால் எண்டோஸ்கோபி மூலம் அது நீக்கப்படுகிறது. அதுவே தொண்டைக்குக் கீழே சென்றால் எக்ஸ்ரே மூலம் எங்கு சிக்கியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது." என்றார் மருத்துவர் கல்யாணி.

மேலும் அவர், "ஒரு மீன் முள் உணவுக் குழாயில் சிக்கி வெளியே வந்தால் அது மிகவும் ஆபத்தானது. இதயம் முழுவதும் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இது மீடியாஸ்டின்டிஸ் என அழைக்கப்படுகிறது" என்றார்.

மீன் முள் உடலில் கரையாதா? Getty Images மீன் உணவு

"மீன் முள் தொண்டையில் சிக்கினால் கவலைப்பட வேண்டியதில்லை, அதனை எளிதாக நீக்கிவிடலாம். அது உணவுக் குழாய்க்குள் சென்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் வயிற்றில் உள்ள அமிலங்கள் எளிதாக மீன் முள்ளை கரைத்துவிடும். அது உணவுக் குழாயில் இருந்து வெளியே வந்தால் தான் சிக்கல்" என மருத்துவர் எம்.ஆர்.எஸ் ஹரிஹரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொண்டையில் மீன் முள் சிக்கிய ஒரு இளம் பெண்ணுக்கு எண்டோஸ்கோபி மூலம் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டா?

மருத்துவர் ஹரிஹரன் சில பரிந்துரைகளை வழங்கினார். "தொண்டையில் மீன் முள் சிக்கினால் வயிற்றில் வலுவாக அழுத்த வேண்டும். இது காற்றுடன் முள் வெளியே வர உதவும். அவ்வப்போது சோடா அருந்துவதும் நல்லது. சோடாவில் உள்ள வாயு தொண்டையின் மீது அழுத்தம் கொடுக்கும், இதன் மூலம் முள் வெளியே வரும்" என்றார்.

இந்த வீட்டு சிகிச்சைகள் உதவவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் அவர்.

"அவ்வப்போது மீன் முள்ளால் தொற்று ஏற்படலாம். பாக்டீரியா தோல் தொற்று அல்லது ஓஸ்டியோமைலிடிஸ் (எலும்பு தொற்று) அல்லது செப்டிசீமியா (இரத்த தொற்று) போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் இவை அரிதான சமயங்களில் தான் நடக்கும்" எனத் தெரிவித்தார் ஹரிஹரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.