வெறும் ரூ.13000ல் ஆரம்பித்த தொழில்.. இன்று ரூ.8000 கோடி சொத்து மதிப்பு.. ஐஸ்க்ரீம் தொழிலில் சென்னை தொழிலதிபரின் சாதனை..!
Tamil Minutes June 08, 2025 11:48 PM

 

இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தெரிந்த ஒரு பெயர் அருண் ஐஸ் கிரீம். ஆனால் இந்த பிரபலமான பிராண்டின் ஆரம்பம் மிகவும் எளிதானதாக இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சாதாரண மனிதர், தனது பரம்பரை சொத்தை விற்று கிடைத்த 13,000 ரூபாயை மட்டும் கொண்டு, சென்னையில் ஒரு ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தொடங்கினார். அந்த மனிதர் தான் சந்திரமோகன்.

1970ஆம் ஆண்டு, அவர் இந்தத் தொழிலில் கால் வைத்த போது, அவருக்கு எதிர்நின்ற சவால்கள் ஏராளம். முதலீட்டு வசதிகள் இல்லை, ஐஸ்கிரீம் தயாரிக்க தேவையான பிரீசர் யூனிட்டுகள் இல்லை, குளிர்சாதன வாகனங்களே இல்லாது போனது. அந்த காலத்தில் வியாபாரிகள், பெரிய ஹோட்டல்கள், அவருடைய ஐஸ்கிரீம் பொருட்களை வாங்க மறுத்தனர். ஆனால் சந்திரமோகன் வித்தியாசமாக சிந்தித்தார்.

பெரிய வாடிக்கையாளர்களை பின்தள்ளி, அவர் கல்லூரி மாணவ, மாணவிகள், கடற்கரை விற்பனையாளர்கள், தெருவோர வியாபாரிகள் என மாறுபட்ட வட்டங்களை நாடினார். இவர்களிடம் நேரடியாக தனது பொருட்களை கொண்டு சென்று நம்பிக்கையுடன் விற்பனை செய்தார்.

முதல் 10 வருடங்கள் அவருக்கு கடினமாகவே இருந்தது, குறைந்த விலை, அதிக பணவீக்கம், தொடர்ந்து பொருளாதார சிக்கல்கள். ஆனால் அவர் மனதை ஒருபோதும் தளரவிடவில்லை. “ஒருநாள் இந்த தொழில் வளர்ந்து காட்டும்” என்ற உறுதி அவரிடம் இருந்தது. அந்த நம்பிக்கையோடு வந்தது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.

1981 ஆம் ஆண்டு, ‘அருண் ஐஸ் கிரீம்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டது. பிறகு அது ‘ஹட்சன்’ என்ற பெரிய நிறுவனமாக மாற்றமடைந்து, பல மாநிலங்களில் பரவிய ஓர் பிராண்டாக வளர்ந்தது.

சந்திரமோகன், ஆரம்பத்தில் பெரிய நகரங்களை புறக்கணித்து, இரண்டாம் நிலை நகரங்களை கவனிக்க தொடங்கினார். உண்மையான வாடிக்கையாளர்கள் அங்கேதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், அவர் அங்கு வேரூன்றினார்.

பால், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கான அனைத்து மூலப்பொருட்களையும், நேரடியாக பண்ணையாளர்களிடமிருந்து வாங்கும் முறையை அவர் கொண்டுவந்தார். இதன் மூலம், தரமான பால் மற்றும் அதன் தயாரிப்புகள் கிடைக்கத் தொடங்கின.

சமூக ஊடகம், விளம்பரப் பிரபலங்கள், மோட்டிவேஷன் பேச்சுகள் எதையும் நாடாமல், அவர் நாடியது ஒன்றே , தரமும் நம்பிக்கையும். அதனால்தான் இன்று, சந்திரமோகன் அவர்களின் சொத்து மதிப்பு ₹8,000 கோடியை எட்டியுள்ளது.

இன்னும் அவருடைய வளர்ச்சி தொடரும் என்பது உறுதி. ஏனெனில், வாழ்க்கையில் சோதனைகள் வந்த போதிலும் தளராமல், தரமான பொருள் மற்றும் மிதமான வாடிக்கையாளர்களுடன் தன்னம்பிக்கையோடு பயணிக்கத் தெரிந்தார் அவர்.

அருண் ஐஸ் கிரீம் மற்றும் சந்திரமோகன் இவை இரண்டும் இன்று எந்த இளைஞனும் கடின உழைப்பால், தரத்தால், நம்பிக்கையால் முன்னேற முடியும் என்பதை நிரூபிக்கும் உன்னத எடுத்துக்காட்டுகள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.