ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி பயங்கரவாதிகளை அழித்த இந்திய ராணுவம், பதிலடியாக தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தையும் தடுத்து நிறுத்தியது. ஆனால் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்திய விமானப்படை தளங்களை தாக்கியதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து உலக நாடுகளிடையே சுய தம்பட்டம் அடித்து வருகிறது.
இந்நிலையில் சுயாதீன சாட்டிலைட் புகைப்பட ஆய்வாளரான டேமியன் சைமன் என்பவர், பாகிஸ்தான் படைகள் இந்திய விமானப்படை தளங்களில் தாக்குதல் நடத்தியதாக வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என்பதை நிரூபித்துள்ளார். முக்கியமாக ஆதம்பூர் விமானதளத்தில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பகிர்ந்த படத்தில் சுகோய் 30 ரக விமானத்தின் பின்புறத்தில் தரையில் கருப்பாக எரிந்தது போல காணப்படுகிறது. அதை குண்டு வீசியதால் ஏற்பட்ட சேதம் என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால் அது அந்த சுகோய் விமானத்தை பழுது சரிசெய்யும் பணியின்போது விமானத்தில் இருந்து வெளிப்பட்ட எரிபொருளால் ஏற்பட்ட கருமை என அவர் விளக்கியுள்ளார்.
அதுபோல காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்களை சைமன் அம்பலப்படுத்தியுள்ளார். சாட்டிலைட் படம் எடுக்கும்போது குறுக்கே தெரிந்த சில மேகத்திரளை கூட தாங்கள் வீசிய குண்டினால் ஏற்பட்ட புகை என்று கண்ட மேனிக்கு பாகிஸ்தான் அளந்து விட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
Edit by Prasanth.K