சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இயற்கை வேளாண்மையில் சிறந்த மாணவருக்கு ஆண்டு தோறும் “நம்மாழ்வார் விருது” வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பசுமை புரட்சி விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், தற்போதைய காலகட்டத்தில் இயற்கை வேளாண்மை முக்கியத்துவம் பெற்று வருகிறது என்றார். "நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனாக, இயற்கை விவசாயத்தின் அவசியத்தை நன்கு புரிந்துள்ளேன். ரசாயனங்களை தவிர்த்து இயற்கை முறையில் திரும்ப வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது," என்றார்.
இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பு செய்த டாக்டர் நம்மாழ்வாரின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது. இது, இயற்கை வேளாண்மையில் முக்கிய ஆராய்ச்சி செய்த மாணவருக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும். விருதுடன் ரூ.50,000 ரொக்கம், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த முயற்சி, இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்து, இந்தியாவின் நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.