அதிக வறட்சி காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டு வந்த பாலருவியில், 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முதல் அனுமதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ள பாலருவியில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி கடும் வறட்சி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக கேரளா வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக பாலருவி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து 35 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சிக்கு சென்று குடும்பத்துடன் குளித்து மகிழ்வது வழக்கம். அந்த வகையில், தற்போது பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் பாலருவியில் குளித்து மகிழ்ந்தனர்.