3 நாட்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கிளாம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர் முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி , சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். கடந்த 4 நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட 11,026 சிறப்பு பேருந்துகளில் சுமார் 6 லட்சத்து 06 ஆயிரத்து 430 பயணிகள் பயணித்துள்ளனர். இவை தவிர ஆம்னி பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தத்தம் வசதிகளுக்கு ஏற்ப லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். 3 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று வேலைக்குச் செல்வோர், பள்ளி - கல்லூரிகளுக்குச் செல்வோர் என சொந்த ஊர்களுக்குச் சென்ற மொத்த பேரும் நேற்று இரவு முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனங்களால் நிரம்பியுள்ளது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.