மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி ரயிலில் வாசலில் நின்று பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் ரயிலில் வாசலில் நின்று பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
காலை மற்றும் மாலை நேரத்தில் ரயிலில் ஏறுவது என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றாக இருக்கும். எனவே இரண்டு நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மும்பையில் இன்று காலை மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.
ரயில் திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ரயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவறி கீழே விழுந்தனர். ஒரே நேரத்தில் 10 முதல் 12 பேர் தவறி விழுந்தனர். அவர்களில் 5 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதால் இனி எதிர்காலத்தில் தயாரிக்கக்கூடிய அனைத்து புறநகர் ரயில்களிலும் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் வகையில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டில் 51 ஆயிரம் பேர் மும்பை ரயில்களில் அடிபட்டு அல்லது கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர் என்கிறது தரவு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...